கல்வியின் முக்கியத்துவம்

காலத்தால் அழிக்க முடியாத கல்வி செல்வத்தை பற்றிய கட்டுரை இது.

கல்வியின் முக்கியத்துவம்

நம் வாழ்க்கையை முன்னேற்றும் சக்திவாய்ந்த கருவி கல்வியாகும். கல்வி ஒருவருடைய அறிவையும், ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல  அந்தஸ்தை தரும்.கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு,  நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. குழந்தையாக கற்க  ஆரம்பித்து , தன் வாழ்நாள்  முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும், அதற்கு எல்லை ஏதுமில்லை.

கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது மற்றும் உயர் பதவிகளிலும் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.

கல்வி ஒருவருக்கு எந்தெந்த இடத்தில் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், கருத்துப்பரிமாற்றத் திறனையும் கற்றுத் தருகிறது. கற்றவர்களுக்கு நினைத்ததை தெளிவாக வெளிப்படுத்தும் ஆற்றல் இருப்பதோடு ,  மற்றவர்களின் எண்ணங்களையும் பல கோணங்களில் ஆராய்ந்து அதற்கு தீர்வு கூறும் வல்லமை பெற்றிருப்பர். இதனால் அவர்களால் எந்த சூழலையும் சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது. கல்வி ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவை தருவதோடு, அதனால் அவர்களால் எந்த இயந்திரத்தையும் எளிதாக உபயோகிக்க முடிகிறது மற்றும் பல துறைகளில் அவர்கள் சாதித்து காட்டுகிறார்கள்.  ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறையினருக்கு முறையாக வழி நடத்த வேண்டும் என்பதிலும்  சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், புதிய கண்டுபிடிப்புகளுக்கும் கல்வி உதவி புரிகிறது.

கல்வி  ஒரு மனிதனின் அறிவை  திறக்கும் திறவுகோல் ஆகும்.மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்வது கல்வியாகும். மனிதனின் நாகரிக வளர்ச்சிக்கு கல்வியின் வளர்ச்சியே அதிகமாக தேவைப்படுகிறது. ஒருவருடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை சமுதாயத்தில் மதிக்கத்தக்கவராக ஆக்குகிறது. கல்வி ஒரு மனிதனை  முன்னேற்றுவதோடு,  அவனுடைய சமூகத்தையும், நாட்டையும்  முன்னேற்றுகிறது. கல்வியின் நோக்கம்   ஒருவருக்கு  அறிவோடு , ஒழுக்கத்தையும், பண்பாட்டையும்  கற்றுத் தருவதாகும். கல்வியின் முக்கியத்துவம் அறிந்ததால் தான் பல நாடுகளில் கல்வியை கட்டாயமாக்குகின்றனர்.