வெந்நீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் 

ஒவ்வொரு காலை பொழுதையும் புத்துணர்ச்சியுடன் தொடங்க ஒவ்வொருவர் ஒரு வழியை பின்பற்றுவர் .நம்மில் பெரும்பாலானவர்கள் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீயின் முகத்தில் தான் விழிப்பார்கள்.

வெந்நீர் குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள் 

சூடாக ஒருபானத்தை  பருகுவதால் உடலுக்கு ஒரு புது வேகம் கிடைக்கிறது. இதனால் தான் நாம் இந்த பானங்களை பருகி வருகிறோம். சூடான திரவங்கள் உடலின் ஒட்டுமொத்த சுகாதாரம், மன ஆரோக்கியம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காலையில் வெந்நீரை பருகுவதால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகிறது. இன்னும் பலவித நன்மைகள் நாம் வெந்நீர் அருந்துவதால் உடலுக்கு ஏற்படுகிறது. அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

செரிமான மண்டலத்தை சுத்தீகரித்து ஆரோக்கியமாக்குகிறது:
வயிற்றில் உள்ள உணவுகளின் செரிமானத்திற்கு தண்ணீர் தேவையாய் இருக்கிறது . மிதமான அல்லது சூடான நீர் குளிர்ந்த நீரை காட்டிலும்  உணவுகளை விரைவில் கூழாக்குகிறது.நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் எண்ணெய் மற்றும் கொழுப்புகளை குளிர்ந்த நீர் இன்னும் கெட்டியாக மாற்றுகிறது. இதனால் செரிமான நேரம் அதிகரிக்கிறது மற்றும் இந்த கொழுப்புகள் கரையாமல் குடலிலேயே தங்கி விடுகின்றன

உணவுக்கு பின் வெந்நீர் அருந்தும்போது உணவையும், கொழுப்பையும் நன்றாக  உடைத்து தருவதால் செரிமான மண்டலம் எளிதாக இயங்குகிறது. இதன்மூலம் எவ்வித கொழுப்பும் வயிற்றில் தங்காமல் வெளியேறுவதால் வயிறு மற்றும் குடல் பகுதி சுத்தமாக இருக்கும்.

மலச்சிக்கலை தடுக்கிறது:
மலச்சிக்கல் உடலில் நீர் வறட்சியால் மற்றும் கெட்ட உணவு பழக்கங்களால் ஏற்படுகிறது. ஆகவே குடல் இயக்கத்தை சீராக்குவதற்கு காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பது சிறந்தது. தினசரி காலையில் வெந்நீர் குடிப்பதால் அந்த நாள் முழுதும் எந்தவொரு செரிமான பிரச்சனைகளும் இல்லாமல் உணவு ஜீரணமாகிறது. இதன் மூலம் மலச்சிக்கல்  மற்றும் அதன் விளைவுகள் தடுக்கப்படுகின்றன.

நச்சுக்களை வெளியேற்றுகிறது:
வெந்நீர் அருந்தும்போது உடல் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதன் மூலம் வியர்வை வெளியேறுகிறது. வியர்வையின் மூலம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியாகி இரத்த ஓட்டத்தை சுத்தம் செய்கிறது. இதன் மூலம் உடல் முழுவதும் சுத்தமாகிறது.
 
இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது:
வெந்நீர் குடிப்பதால் நச்சுக்கள் வெளியேறி  இரத்தம் சுத்தப்படுவதால் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கும்போது ஆக்சிஜென் மற்றும் ஊட்டச்சத்துகளை  உடலின் எல்லா பாகங்களுக்கும் கொண்டு செல்லும் பணியும் வேகமாக நடக்கிறது. இதன்மூலம் உடலின் ஆற்றலும் அதிகரிக்கிறது.

வயது மூப்பை தடுக்கிறது:
உடலில் நச்சுக்கள் சேரும்போது அது நமது வயதை அதிகமாக காட்டுகிறது.வெந்நீர் உடலின் உட்பகுதியை சுத்தீகரிப்பது மட்டுமல்ல, தோலின் சுருங்கி விரியும் தன்மையையும் சரி செய்கிறது. அடிக்கடி வெந்நீர் அருந்துவதால் சருமத்தில் வெடிப்புகள் மற்றும் கட்டிகள் உருவாகாமல் தடுக்கலாம். சருமத்தை மென்மையாகவும் வைக்க வெந்நீர் குடிப்பது உதவுகிறது.

சுறுசுறுப்பாக வைக்கிறது:
உடலில் உள்ள நச்சுக்கள் வெளியானதால் உடல் புத்துணர்ச்சியோடு காணப்படுகிறது. வெந்நீரை தொடர்ந்து குடித்து வருவதால் உடலின் ஸ்டாமினா அதிகரிக்கிறது , மற்றும் மொத்த உறுப்புகளும் சிறப்பாக செயல்பட தொடங்குகின்றன.

உடல் பருமனை குறைக்கிறது:
வெந்நீர் அருந்துவதால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது. இதன்மூலம் வளர்சிதை மாற்றமும் அதிகரிக்கிறது. இதனால் அதிகமான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. 1 கிளாஸ் வெந்நீருடன் 1 எலுமிச்சை பழத்தின் சாறை சேர்த்து பருகும்போது உடலில் உள்ள கொழுப்புகள் உடைக்கப்படுகின்றன . எலுமிச்சையில் உள்ள பெக்டின் எனும் நார்சத்து பசியின் தூண்டுதலை குறைப்பதால் உடல் பருமன் குறைகிறது.

எவ்வளவு வெந்நீர் அருந்த வேண்டும்?
பல ஆராய்ச்சியாளர்கள் ஒரு நாளைக்கு 8 க்ளாஸ் தண்ணீர் பருக வேண்டும் என்று கூறுகின்றர். ஆனால் நம் உடலின்  சிக்னல்களுக்கு ஏற்ப நாம் தண்ணீர் அருந்துவது உகந்தது. 

ஒரு நாள் முழுதும் வெந்நீர் குடிப்பது இயலாத விஷயம் என்று தோன்றினால் கீழே சொல்லப்பட்டவற்றை முயற்சிக்கலாம்.

 . காலையில் எழுந்தவுடன் வெந்நீருடன் சிறிது எலுமிச்சம் பழம் சேர்த்து குடிப்பதால் உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.
 . உணவிற்கு  ½ மணி நேரம் முன்னும் ½ மணி நேரம்  பின்னும் வெந்நீர் அருந்துவது நல்லது.
 . வயிறு மந்தமாக (உப்பலாக) இருப்பதை  போல் உணரும்போது வெந்நீர்  அருந்துவது உடனடியாக நிவாரணம் தரும்.