குழந்தையின் செரிமானத்திற்கு உதவும் ஆயுர்வேதம்

குழந்தையின் செரிமான மண்டலம் மிகவும் மென்மையானது.

குழந்தையின் செரிமானத்திற்கு உதவும் ஆயுர்வேதம்

பிறக்கும்போது குழந்தையின் செரிமான மண்டலம் முழுமையாக வளர்ச்சி பெறாமல் , பிறந்த பிறகு நாளுக்குள் நாள் வளார்ச்சி அடைவதால், தொற்று மற்றும் நோய் பாதிப்பு உண்டாவதற்கான வாய்ப்புகள் ஏராளம் உண்டு. குழந்தையின் உணவு அட்டவணையில் ஒரு சிறு மாற்றம் அல்லது ஒரு தவறான மூலப்பொருள் போன்றவை கூட அவர்களின் செரிமான பாதையில் இடையூறை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. ஆகவே தாய்மார்கள், குறிப்பாக முதன்முறையாக தாய்மையை அனுபவிப்பவர்கள் தங்கள் குழந்தையின் செரிமான ஆரோக்கியத்தில் மிகுந்த கவனத்துடன் இருப்பார்கள். குழந்தையின் வயது காரணமாக அவர்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் மருந்துகள் கொடுப்பது இயலாத காரியம் ஆகும். ஆகவே இயற்கைத் தீர்வுகள் மூலமாக மட்டுமே அவர்களின் தொந்தரவுகளை சரி செய்ய முடியும். இதனால் பக்க விளைவுகள் தவிர்க்கப் படுகின்றன.

குழந்தைக்கு செரிமான மண்டலத்தில் கோளாறு உள்ளது என்பதை உணர்த்தும் சில பொதுவான அறிகுறிகள் மற்றும் வெளிப்பாடுகள் பற்றி இப்போது நாம் அறிந்து கொள்வோம். அவை,
 . மலச்சிக்கல்
 . வாய்வு
 . வயிறு வீக்கம் 
 . வாந்தி
 . வயிற்றுப்போக்கு
 . குழந்தை அழுது கொண்டே இருப்பது 
 . தொற்று பாதிப்பு அல்லது காய்ச்சல்

குழந்தையின் செரிமான தொந்தரவை சரி செய்வதற்கான ஆயுர்வேத சிகிச்சை:

1. தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தையின் உடலை சரியான நிலையில் வைத்துக் கொள்ளுங்கள் :
தாய்ப்பால் பருகும்போது குழந்தையின் அங்கம் தவறான நிலையில் இருப்பதும் செரிமான தொந்தரவு ஏற்படக் காரணமாக உள்ளது. இதனால் வாய்வு அல்லது எதுக்களித்தல் போன்றவை உண்டாகலாம். தாய்ப்பால் கொடுக்கும்போது, குழந்தையின் தலைப் பகுதி, வயிற்றுப் பகுதியை விட மேலே உயர்வாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். இந்த நிலையில் தாய்ப்பால் பருகுவதால் பால் நேரடியாக கீழே வயிறு நோக்கி செல்ல இயலும், வயிற்றில் உள்ள காற்றும் ஏப்பமாக மேலே எழும்பி வந்துவிடும்.

குழந்தையை உங்கள் மடியில் கிடத்திக் கொண்டு பால் கொடுக்கும்போது, குழந்தையின் தலைப் பகுதி சற்று உயரமாக இருக்கும்விதத்தில் உங்கள் கால்களை வைத்துக் கொள்ளுங்கள், மேலும் ஒரு மென்மையான தலையணையை கழுத்து பகுதிக்கு அணையாக கொடுத்துக் கொள்ளலாம். 
 
2. குழந்தைக்கு மசாஜ் செய்யவும்:
குழந்தையின் வயிற்றில் மென்மையாக மசாஜ் செய்வதால் குழந்தையின் செரிமான பிரச்சனை குறையும். குழந்தையின் தொப்புளை சுற்றியுள்ள பகுதியில் மென்மையாக மசாஜ் செய்யவும். மிகவும் கடினமாக அழுத்த வேண்டாம். குழந்தையின் வயிற்றுப் பகுதியை சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும். பேபி எண்ணெய் அல்லது க்ரீம் பயன்படுத்தி வயிற்றில் மசாஜ் செய்யலாம். 

3. குழந்தைக்கு ஏப்பம் வருவதை உறுதி செய்யவும்:
ஒவ்வொரு  முறை தாய்ப்பால் பருகியவுடன் குழந்தைக்கு ஏப்பம் வருவதை உறுதி செய்து கொள்ளவும். குழந்தைக்கு செரிமான தொந்தரவுகள் நிற்பதற்கு இதுவும் ஒரு முக்கிய வழியாகும். ஏப்பம் விடுவதால் வயிற்றில் உள்ள வாய்வு கலைந்து வெளியாகிறது. மேலும், இதனால் குழந்தை பால் உமிழ்வதும் தடுக்கப்படும். குழந்தைக்கு தாய்பால் கொடுத்தவுடன், சில நிமிடங்கள் குழந்தையை உங்கள் தோளில் கிடத்தி, அவர்கள் முதுகை மென்மையாக தட்டிக் கொடுங்கள். இதனால் குழந்தைக்கு ஏப்பம் வந்துவிடும். பின்பு அவர்களை வழக்கம்போல் கீழே படுக்க வைத்து விடலாம்.

4. தாய்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்:
குழந்தைக்கு அடிக்கடி செரிமான தொந்தரவு ஏற்பட்டால், வேறு எந்த கூடுதல் உணவோ அல்லது பானமோ கொடுப்பதை தவிர்க்கலாம். மருத்துவர் பரிந்துரைக்கும் காலம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் தவிர வேறு உணவுகள் கொடுக்க எண்ணும்போது மருத்துவ ஆலோசனை செய்து கொள்வது நல்லது. ஒருவேளை, அப்படி கூடுதல் உணவு கொடுக்கும் நேரத்தில் குழந்தைக்கு அசௌகரியம் உண்டாவதை கவனிக்க நேரிட்டால், உடனடியாக அதனை நிறுத்திக் கொள்ள வேண்டும். மேலும், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை திடீரென்று நிறுத்த வேண்டாம். தாய்பால் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்று எண்ணும்போது மெதுமெதுவாக நிறுத்த வேண்டும். மற்ற உணவுகளை குழந்தை சரியாக எடுத்துக் கொள்ளத் தொடங்கும்போது, தாய்ப்பால் அளவை சிறிது சிறிதாக குறைத்து பின்பு முற்றிலும் நிறுத்தலாம். இதனால் குழந்தையின் வளர்ச்சியில் எந்த ஒரு தடையும் இல்லாமல் இருக்கும்.

5. கிரைப் வாட்டர் :
குழந்தையின் வயிறு தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கும் பல காலமாக சிறந்த தீர்வைத் தந்து வருவது கிரைப் வாட்டர். தண்ணீர், சோடியம் கார்போனேட் மற்றும் பல மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவது இந்த கிரைப் வாட்டர். மேலும் குழந்தையின் வாய்வு தொந்தரவைப் போக்க மிகவும் பாதுகாப்பான ஒரு மருந்து இது. இந்த மருந்தைக் கொடுத்த அடுத்த 5 நிமிடத்தில் குழந்தையின் வயிற்றில் இது வேலை புரியத் தொடங்கிவிடும். அதனால் மிக வேகமாக குழந்தை இயல்பு நிலைக்கு திரும்பிவிடலாம்.

மருத்துவ ஆலோசனை இல்லாமல் எந்த ஒரு மாத்திரை மருந்தையும் குழந்தைக்கு கொடுக்க வேண்டாம்.மேலே கூறிய தீர்வுகளை முயற்சியுங்கள். இவை எதுவும் பலனளிக்கவில்லை என்றால் அதன்பிறகு மருத்துவரை அணுகுங்கள்.