குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு ஏன் முக்கியம் ?

குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் அரவணைப்பு

1990ம் ஆண்டிற்கு முன் பிறந்தவர்களில் பெரும்பாலானோர் வீட்டில் தாத்தா பாட்டி இருந்திருப்பார்கள். அன்றைய பேரப்பிள்ளைகளை தாத்தா பாட்டிகள் மிகுந்த பாசத்துடன் அரவணைப்புடன் வளர்த்திருப்பார்கள். அந்த காலகட்டத்தில் தாத்தா பாட்டியுடன் வளர்ந்த நாட்களை இப்போது நினைத்தாலும் அது ஒரு நல்ல  நினைவையும் உணர்வையும் தரும். தாத்தா பாட்டியுடன் வளரும் பேரப்பிள்ளைகள் ஒரு வித உணர்வு பூர்வமான சிந்தனையுடன் வளர்க்கப்படுகிறார்கள். அவ்வித குழந்தைகள் மிகவும் சந்தோஷமாக வளர்கிறார்கள். எந்த சூழலிலும் தன்னை இணைத்துக் கொள்வது, எதையும் பகிர்ந்து கொள்வது போன்ற குணநலன்கள் அவர்களுக்கு அமைந்திருக்கிறது. எல்லாவற்றையும் விட கூட்டுக்  குடும்பத்தில் வளர்ந்தவர்களுக்கு குடும்ப அமைப்பின் மீது ஒரு பற்றும் , பெரியவர்கள் மேல் மரியாதையும் நிறைந்து காணப்படுகிறது. நீங்கள் உங்கள் குழந்தைகளை உங்கள் பெற்றோருடன் இருக்கச் செய்ய வேண்டும் என்று அறிவியல் கூறுகிறது. அறிவியலின்படி, தாத்தா பாட்டியுடன் வளரும் குழந்தைகள் தனியாக வளரும் குழந்தைகளில் இருந்து வேறுபடுகிறார்கள் . தாத்தா பாட்டியுடன் பேரப்பிள்ளைகள் இருக்க வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் 5 காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. பிள்ளைகள் பாதுகாப்பாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள் :

இன்றைய காலகட்டத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இந்த நிலையில் பிள்ளைகளை தாத்தா பாட்டி கவனித்துக் கொள்ளலாம். அவர்களை விட அதிக கவனமாக வேறு யாரும் குழந்தைகளை பார்த்துக் கொள்ள முடியாது. குழந்தையை வளர்ப்பது மட்டுமல்ல குழந்தையை பாதுகாக்கவும் அவர்கள் இருப்பார்கள். பெருகி வரும் பல சமுதாய பிரச்சனைகளில், குழந்தையை தனியாக வீட்டில் இருக்க வைக்க முடியாத நிலையில், வேறு யாரோ ஒருவரை நம்பி பிள்ளைகளை விடுவதற்கு மாற்றாக தாத்தா பாட்டியிடம் தாராளமாக விட்டுவிடலாம். அவர்களைவிட சிறந்த பாதுகாப்பு குழந்தைகளுக்கு வேறு யாரும் இல்லை.

  1. பிள்ளைகள் பல நல்ல பழக்கங்களை கற்றுக் கொள்வார்கள் :

தாத்தா பாட்டியுடன் நேரம் செலவிடும் போது பிள்ளைகள் தங்களுடைய குடும்ப வரலாறு பற்றி அறிந்து கொள்கிறார்கள். இதனால் குடும்பத்தின் மீது ஓட்டுதல் அதிகரிக்கிறது. மற்றும் பாசம், மரியாதை , சேவை போன்ற குணநலன்கள் அவர்களுக்கு உண்டாகிறது. இதனால் குழந்தைகளின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கிறது. பிடிவாதம் தளர்கிறது.  மற்ற பிள்ளைகளைக் காட்டிலும் அதிக சமர்த்தாக அதிக முதிர்ச்சியுடன் நடந்து கொள்கின்றனர். தங்கள் குடும்ப வரலாறு மற்றும் குடும்பத்தினர் கடந்து  வந்த பாதை ஆகியவற்றைப் பற்றி குழந்தைகள் அறிந்து கொள்வதால் கஷ்டமான தருணங்களை எதிர்கொள்ள கற்றுக் கொள்கின்றனர்.

  1. உணர்வு ரீதியாக வலிமை அடைகின்றனர்:

பிள்ளைகள் தாத்தா பாட்டியுடன் அதிக நேரம் செலவிடுவதால் , உணர்வு ரீதியான மற்றும் நடத்தை சார்ந்த பிரச்சனைகளை எப்படி அணுகுவது என்று நல்ல புரிதல் உண்டாகிறது. இந்த சூழ்நிலைகளை அவர்கள் கடந்து வருவதால் வயதாகும்போது எந்த பிரச்சனையையும் தாங்கக்கூடிய  சக்தி அவர்களுக்கு உண்டாகிறது.  தாத்தா பாட்டியுடன் வளரும் பிள்ளைகள் தனிமை, பதட்டம், மனஅழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதில்லை என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வு குறிப்பிடுகிறது. வாழ்க்கையை எந்த விதத்திலும் வாழவும், பிரச்சனைகளை தீர்க்கவும் அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள்.

  1. நீதி நெறிகள் :

குழந்தைகளுக்கு நற்பண்புகள் கற்றுக்கொடுப்பது, நீதி நெறிகளைப் புகட்டுவது, இரக்கம், அன்பு ஆகியவற்றைக் கற்றுக் கொடுப்பது போன்றவை பெற்றோரின் முதன்மையான கடமையாகும். இந்த விதத்தில் தாத்தா பாட்டி போன்றோர் நம்பிக்கை, அன்பு, ஆரம்ப கல்வி போன்றவற்றின் தூண்களாக இருக்கின்றனர். அவர்கள் கூறும் கதைகள் மற்றும் அவற்றில் உள்ள நீதி போன்றவை பிள்ளைகளின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.  தாத்தா பாட்டியிடம் நீதி நெறிமுறைகளை பிள்ளைகள் கற்றுக்கொள்வதால் சமுதாயத்தில் மரியாதை மிக்க , புரிதல் உள்ள அழகான பிள்ளைகளாக அவர்கள் வளர முடிகிறது. 

  1. ஆரோக்கியமான மற்றும்  சந்தோஷமான தாத்தா பாட்டி :

தாத்தா பாட்டியுடன் பிள்ளைகள் வளர்வதால் பிள்ளைகள் மட்டும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதில்லை, தாத்தா பாட்டியும் சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள். உங்கள் பிள்ளைகளுடன் அவர்கள் இருக்கும்போது மிகவும் சந்தோஷமாக உணர்கிறார்கள். வயது அதிகரிக்கும்போது  பெற்றோர்கள் பொதுவாக மனஅழுத்தம் , அல்சைமர் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். இந்த நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம் தனிமை என்பது ஆராய்ந்து பார்க்கும்போது தெரிய வருகிறது. ஆகவே உங்கள் பெற்றோரை இந்த பாதிப்பில் இருந்து பாதுகாத்து உங்கள் பிள்ளைகளுக்கு ஒரு ஆரோக்கியமான வருங்காலத்தை அமைத்துக் கொடுக்க உங்கள் பெற்றோரையும் உங்கள் பிள்ளைகளையும் ஒன்றாக இருக்க வையுங்கள். இது ஒரு ஆரோக்கியமான நாளைய சமுதாயத்தை உண்டாக்கும்.