நீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்

மூட்டுகளில் வீக்கம் உண்டாக்கும் நீர்க்கட்டு ஏற்படக் காரணம் என்ன மற்றும் இதற்கான சிகிச்சை என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ள தொடர்ந்து எங்கள் பதிவைப் படியுங்கள்.

 நீர்க்கட்டு இருந்தால் என்ன செய்ய வேண்டும்

உடல் திசுக்களில் சேரும் அதிக நீரின் காரணமாக வீக்கம் உண்டாகும் நிலையை நீர்க்கட்டு என்று கூறுவோம். இதனை ஆங்கிலத்தில் எட்மா என்று கூறுவார்கள். கால் பாதங்களில், கணுக்கால் , கால் மற்றும் உடலின் வேறு சில பகுதிகளிலும் இந்த நீர்க்கட்டு தோன்றும். இதய செயலிழப்பின் காரணமாக இந்த நிலை ஏற்படலாம். மருந்து உட்கொள்வது, கர்ப்பம் அல்லது சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் அழற்சி போன்ற வேறு சில உடல் நிலைக் கோளாறால் இந்த பாதிப்பு ஏற்படலாம். 

இதய செயலிழப்பு, நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், மற்றும் தைராய்டு நோய் ஆகியவை இத்தகைய நீர்க்கட்டு உண்டாவதற்கான உடல் பாதிப்புகளாகும். இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த எடுத்துக் கொள்ளும் மருந்துகளும் நீர்க்கட்டு ஏற்படக் காரணமாக இருக்கலாம். அல்லது ஏதேனும் ஒவ்வாமை வினையால் கூட இந்த பாதிப்பு ஏற்படலாம்.

 உங்களுக்கு நீர்க்கட்டு பாதிப்பு உள்ளது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் :

  . சருமத்திற்கு அடியில் இருக்கும் திசுக்களில் வீக்கம் அல்லது தடிப்பு தோன்றுவது , குறிப்பாக கால் அல்லது கைகளில் இத்தகைய வீக்கம் உண்டாவது நீர்கட்டின் முதல் அறிகுறியாகும்.
  . கைகள் அல்லது கால்கள் கனமாக இருப்பது போன்ற உணர்வு.
  . பளபளப்பான அல்லது தளர்ச்சியான சருமம்
  . சில வினாடிகள் தொடர்ந்து அழுந்தும் போது , சருமத்தில் குழி விழுவது 
  . ஆடை அல்லது அணிகலன்கள் உள்ளே நுழைய முடியாதது
  . வீக்கம் உண்டான இடத்தில் இறுக்கமாக அல்லது சூடாக உணர்வது
  . மூட்டுகளை அசைப்பதில் அசௌகரியம் உண்டாவது .
  . அடிவயிறு அசாதாரண வடிவத்தில் இருப்பது
  
மேலே கூறிய அறிகுறிகளில் எதாவது உங்களிடம் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும். இந்த அறிகுறிகளுடன் இணைந்து, மூச்சு விடுவதில் சிரமம், மூச்சு வாங்குதல், அல்லது நெஞ்சு வலி ஆகியவை இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகவும்.
  
இதய செயலிழப்பிற்கும் நீர்கட்டுக்கும் என்ன தொடர்பு உள்ளது ?
ஒரு நபர் இதய செயலிழப்பை அனுபவிக்கும்போது, இதயத்தின் கீழ் அறைகள் சீரான விதத்தில் இரத்தத்தை உறிஞ்சுவதில்லை. இந்த இரத்தம் கால், கணுக்கால், பாதம் போன்ற இடத்தில் சேர்ந்து வீக்கம் அல்லது நீர்க்கட்டு உண்டாகலாம்.

ஒரு நபர் நீண்ட நேரம் சாய்ந்து கொண்டே இருந்தால் வீக்கம் முதுகு பகுதியில் உண்டாகலாம். 

இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு சில நேரம் அடிவயிற்றில் வீக்கம் உண்டாகலாம். இதனால் நுரையீரலில் திரவ சேர்க்கை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. இதனை பல்மோனரி எட்மா அல்லது நுரையீரல் வீக்கம் என்று கூறுவர். நுரையீரல் வீக்கம் ஏற்படுவதால், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படலாம். சில நேரம் உயிர் தாக்கும் அபாயமும் ஏற்படலாம். மூச்சு சம்பந்தமான கோளாறுடன் நீர்கட்டும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் அவசியம்.

 நீர்கட்டுக்கான வேறு சில காரணங்கள்:
 உடலில் ஏற்படும் வேறு சில கோளாறுகளும் நீர்கட்டுக்கு காரணமாக உள்ளன.

  . இரத்த நாளங்களில் நாட்பட்ட குறைபாடு:
 கால் பகுதியில் உள்ள இரத்த நாளங்களின் சீரற்ற செயல்பாடு காரணமாக கால்களில் வீக்கம் ஏற்படலாம். இந்த நிலையில் உள்ள மனிதர்களின் இரத்த நாளங்கள் போதிய அளவு இரத்தத்தை பாதம் முதல் இதயம் வரை திரும்ப எடுத்துச் செல்லும் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படுவதால் இந்த இரத்தம் கால்களில் தங்கி விடுகிறது. அதிகரித்த அழுத்தம் காரணமாக இரத்த நாளத்தில் உள்ள திரவம் அருகில் இருக்கும் திசுக்களுக்கு பரவுகிறது.  இதனால் நீர்க்கட்டு ஏற்படுகிறது.

  . சிறுநீரக நோயால் உண்டாகும் நீர்க்கட்டு:
 சிறுநீரக நோய் பாதிப்பால், இரத்த ஓட்ட மண்டலத்தில் சோடியம் மற்றும் அதிக திரவம் சேர்க்கப்படுகிறது. இதனால் இரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்பட்டு வீக்கம் உண்டாகிறது. சிறுநீரக நோயால் உண்டாகும் நீர்க்கட்டு உடலின் பல்வேறு இடங்களில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

  . சிறுநீரக சிதைவு நோய்க்குறி : சிறுநீரகத்தில் உள்ள சிறிய வடிகட்டும் இரத்த நாளங்கள் சரியாக இயங்காமல் இருப்பதால் , சிறுநீர் வழியாக புரதம் வெளியேறுகிறது. இதனால் இரத்தத்தில் புரத அளவு குறைந்து அதிக நீர்த்தேக்கம் உண்டாகிறது. இதனால் நீர்க்கட்டு உண்டாகிறது.

  . கல்லீரல் அழற்சி :
 கல்லீரலில் உள்ள திசுக்கள் சேதமடைவதால் அடிவயிற்றில் நீர்க்கட்டு உண்டாகலாம். காரணம், கல்லீரல் அழற்சியால் கல்லீரலில் புரத அளவு குறைகிறது . இதனால் இரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரித்து அடிவயிற்றில் அதிக நீர்த்தேக்கம் உண்டாகிறது.

  . நுரையீரலில் தீவிர நிலைகள்:
 எபிசிமா என்னும் திசுக்களில் காற்று பரவும் நிலை ஒரு நுரையீரல் பாதிப்பாகும். இந்த வகை பாதிப்பு, நுரையீரல் மற்றும் இதயத்தில் அழுத்தத்தை உண்டாக்கி நீர்க்கட்டு உண்டாக காரணமாகிறது. 

 நீர்கட்டால் உண்டாகும் சிக்கல்கள் :

 நீர்க்கட்டு பாதிப்பை கவனிக்காமல் மற்றும் சிகிச்சை அளிக்காமல் இருந்தால், கீழே குறிப்பிட்டுள்ள சிக்கல்கள் உண்டாக நேரலாம்.
  1. வலியுடன் கூடிய வீக்கம்
  2. சருமம் கடினமாதல்
  3. நடப்பதில் சிரமம்
  4. அரிப்புடன் கூடிய தளர்ந்த சருமம்
  5. சரும புண் , குறிப்பாக பாதிக்கப்பட்ட இடத்தில் அதிகரித்த தொற்று பாதிப்பு
  6. தழும்பு
  7. குறைவான இரத்த ஓட்டம்

 நீர்கட்டுக்கான சிகிச்சை மற்றும் குணமாவதற்கான தீர்வு:
  . மிதமான அளவு நீர்க்கட்டு பாதிப்பு வாழ்வியலில் சில குறிப்பிட்ட மாறுதல்களை செய்வதால் தானாகவே மறைந்து விடக் கூடும். 
  . தீவிர நீர்கட்டு பாதிப்புகளை சிறுநீர் பிரிப்பு சிகிச்சை மூலம் குணமாக்கலாம்.(உடலில் உள்ள அதிக அளவு திரவத்தை சிறுநீர் வழியாக வெளியேற்ற உதவும் மருந்து)
  . இதய செயலிழப்பு போன்ற உடல்நிலை பாதிப்பால் உண்டாகும் நீர்கட்டைப் போக்க,  நீண்ட கால நிர்வகிப்பு முறையில் கவனம் செலுத்தி உடல் பாதிப்பை சரி செய்வதன் மூலம் நீர்கட்டை குணப்படுத்த முடியும்

 நீர்க்கட்டு பாதிப்பைக் குறைக்க உதவும் சில வாழ்க்கை முறை மாற்றங்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
 வாழ்க்கை முறை  மாற்றங்கள் :
  . உயரமாக வைத்து கொள்வது :
 மூட்டுகளை உயரமாக வைத்துக் கொண்டு அமர்வது, வீக்கமாக உள்ள கை அல்லது காலை இதயத்திற்கு மேலே உயரமாக வைத்துக் கொள்ளுவது போன்ற பயிற்சிகளை ஒரு நாளில் பலமுறை செய்வதால் வீக்கம் குறைய உதவும். சில நேரம், தூங்கும் சமயம், மூட்டுகளை உயரமாக வைத்துக் கொண்டு தூங்குவதால் சில நன்மைகள் கிடைக்கும்.

  . உடற்பயிற்சி:
 நீர்க்கட்டு பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தசைகளை அசைப்பதால் குறிப்பாக, கால்களை அசைப்பதால் கால்களில் தங்கி இருக்கும் அதிக திரவம், இதயத்திற்கு திருப்பி அனுப்பப்படுகிறது. உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து இதற்கான சரியான உடற்பயிற்சியை அறிந்து செய்வதன் மூலம் வீக்கம் குறையலாம்.
  
  . மசாஜ்:
 பாதிக்கப்பட்ட இடத்தில் கடினமாக இல்லாமல் மென்மையான முறையில் மசாஜ் செய்வதால், பாதிக்கப்பட்ட இடத்தில் தேங்கி இருக்கும் திரவம், இதயம் நோக்கி  பாய்வதை ஊக்குவிக்க முடியும். 

  . உப்பு குறைவாக சேர்த்துக் கொள்வது:
 உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொள்வதால், உடலின் நீர் சத்து அதிகரித்து வீக்கம் மோசமடைய வாய்ப்பு உள்ளது. ஆகவே மருத்துவ ஆலோசனை பெற்று உணவில் குறைவாக உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

  . அழுத்தம்:
 மூட்டுகளில் வீக்கம் குறைந்தவுடன், அவை மறுபடி வராமல் தடுக்க அழுத்தம் நிறைந்த சாக்ஸ், ஸ்லீவ்ஸ், க்ளௌஸ் போன்றவற்றை அணியுமாறு மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம். இந்த ஆடைகள், கை மற்றும் கால்களில் அழுத்தம் கொடுத்து திரவம் அந்த இடங்களில் சேராமல் பார்த்துக் கொள்கின்றன.