உடனடியாக இருமல் சளியை போக்க கல்யாண முருங்கை தோசை

நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் எண்ணத்திலும், குழந்தைகளுக்கு சத்தான கல்யாண முருங்கை தோசையாக எப்படி செய்து கொடுக்க வேண்டும் என்பதையும் இக்கட்டுரையில் பார்ப்போம்.

உடனடியாக இருமல் சளியை போக்க கல்யாண முருங்கை தோசை

கல்யாண முருங்கை தோசை:

கல்யாண முருங்கையில் பல சத்துக்கள் உள்ளது. இது பல நோய்களை குணமாக்குகிறது குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், சளியை குணமாக்குகிறது, 

உடல் சூட்டைக் குறைக்கிறது, 

எலும்புகளை வலுப்படுத்துகிறது, மலச்சிக்கலை போக்குகிறது, 

நாடா புழு, வட்ட புழு மற்றும் நூல் புழுவை வெளியேற்றுகிறது, கண் பிரச்சினைகளை போக்குகிறது. சத்தான உணவை குழந்தைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோர்களுக்கும் உண்டு. ஆனால் பொதுவாகவே குழந்தைகள் கீரைகளை கண்டாலே ஓடுவார்கள். அவர்கள் விரும்பி சாப்பிடும் தோசையை சத்தான கல்யாண முருங்கை தோசையாக எப்படி செய்து கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில் பார்ப்போம். 

கல்யாண முருங்கை தோசையை தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

  1. முள் முருங்கை இலை -10
  2. இட்லி அரிசி- 200 கிராம்
  3. உளுத்தம் பருப்பு -50 கிராம்
  4. மிளகு தூள் - தேவையான அளவு
  5. சீரகம் - ¼ ஸ்பூன்
  6. சிறிய வெங்காயம் -100 கிராம (தேவையென்றால் சேர்த்துக் கொள்ளவும்)
  7. உப்பு-தேவையான அளவு 
  8. எண்ணெய் - தேவையான அளவு

              (அல்லது)

உடனடியாக மாவை தயாரிக்க :

  1. வீட்டில் இருக்கும் தோசை மாவு – 1 கப்
  2. கல்யாண முருங்கை கீரை – 1 கை பிடி அளவு
  3. மிளகு - தேவையான அளவு
  4. சீரகம் - ¼  ஸ்பூன்
  5. உப்பு – தேவையான அளவு
  6. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

அரிசி மற்றும் உளுந்தை சுத்தமாக கழுவி 2மணி நேரம் ஊற வைக்கவும். அடுத்து

கல்யாண முருங்கை கீரையை சுத்தம் செய்து அலசிக் கொள்ளவும். கீரையை சுத்தம் செய்து நடுவில் உள்ள நரம்பை எடுத்து விடவும். 2 மணிநேரம் ஊற வைத்த அரிசி மற்றும் உளுந்துடன் கல்யாண முருங்கையையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சீரகம், (தேவையென்றால் சிறிய வெங்காயம்) சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள். இந்த மாவு புளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அரைத்த உடனே பயன்படுத்தலாம்.

(அல்லது)

(மாவை உடனடியாக தயார்  செய்ய இரண்டாவது குறிப்பிட்டுள்ள பொருட்களை கொண்டு செய்யலாம்).

மிக்ஸியில் ஒரு கைப்பிடி  கல்யாண முருங்கை கீரையையும் வீட்டில் ஏற்கனவே இருக்கும் தோசை மாவையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இந்த அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு, மிளகு தூள், சீரகத்தையும் சேர்த்து கலந்து வைத்து கொள்ளுங்கள்.

பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து கல் சூடானவுடன் மாவினை தோசையாக ஊற்றி எண்ணெய் விடவும். வெந்ததும் மறுபுறம் திருப்பி வேக விடவும். இப்போது சத்தான கல்யாண முருங்கை தோசை தயார்.

நம் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் எண்ணத்திலும், நம் முன்னோர்கள் உண்ட உணவை, நம் குழந்தைகளை உண்ண வைத்து ஆரோக்கியமான வாழ்வை அவர்களுக்கு கொடுப்பதே

இக்கட்டுரையின் நோக்கமாகும்.