தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க ஆளி விதை 

கேரளா பெண்களை போல் உலக பெண்கள் அனைவரும் அழகான முடியை பெற ஒரு வழி முறை உள்ளது. அதனை பற்றி தான் இப்பொது பார்க்க போகிறோம்.

தலை முடி வளர்ச்சியை அதிகரிக்க ஆளி விதை 

தலை முடி அதிகமாக இருக்க வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பம் தான். இருந்தாலும் எத்தனை பேருக்கு அழகான அடர்த்தியான, கருமையான, நீளமான, வலுவான, தலை முடி இருக்கிறது என்ற கேள்விக்கு மிக சொற்ப எண்ணிக்கை தான் பதிலாக இருக்கும். தலை முடியின் அழகில் இத்தனை அம்சங்கள் உள்ளனவா? ஆம் ! இவற்றில் எதாவது 2 அம்சங்கள் இருந்தால் கூட தலை முடி காண்பதற்கு அழகாக இருக்கும். 

பொதுவாக இந்தியாவில் கேரள பெண்களின் தலைமுடி அழகானது என்ற கருத்து உண்டு. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. அவர்கள் மெனக்கெட்டு தலை முடியை பராமரிப்பதில் கவனம் செலுத்துவர். தேங்காய் எண்ணெய்யை அதிகம் பயன்படுத்துவர். பெரும்பாலும் தினமும் தலைக்கு குளிப்பர் . பல வித ஷாம்புக்களை பயன்படுத்தாமல் வீட்டில் அரைத்த சீயக்காவை மட்டுமே பயன்படுத்துவர். தலைக்கு குளித்து முடித்தவுடன் தலைக்கு சிறிதளவு எண்ணெய் வைத்துக் கொள்வர். இதனால் அவர்களின் முடி கருமையாகவும், உடையாமலும் இருக்கும்.அனைவரும் அழகான முடியை பெற ஒரு வழி  உள்ளது.  அதற்கு பயன்படுத்தும்  பொருள் என்ன என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா?

அது தான் ஆளி விதை. ஆளி விதையில் புரதம், கால்சியம், ஜின்க், மெக்னீசியம், இரும்பு , எல்லாவற்றுக்கும் மேலாக ஒமேகா 3 கொழுப்பு அமிலம் போன்றவை அதிகமாக உள்ளது. முடி வளர்ச்சிக்கு இவற்றின் பங்கு முக்கியமானது. 

ஏன் ஆளி விதை?
ஆளி விதையில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முடியின் வேர்க்கால்களை உயிர்ப்பித்து அதன் எலாஸ்டிக் தன்மையை அதிகரிக்கிறது. இதனால் முடி வலிமையாக, ஆரோக்கியமாக, உடையாமல் இருக்க முடிகிறது. ஓமெகா 3 கொழுப்பு அமிலத்தின் அழற்சியை தடுக்கும் தன்மை, தலையில் ஏற்படும் பொடுகு, மற்றும் அரிப்பை போக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. சருமத்தில் ஏற்படும் எக்ஸிமா போன்ற நோய்களையும் தடுக்கிறது. ஆளி விதையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதனை நமது உணவில் எடுத்துக் கொள்வதால் முடி உடைதல், வெடிப்பு ஏற்படுதல் போன்றவை குறைக்கப்படுகிறது. முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. ஆளி விதைகள் முடியை கண்டிஷனிங் செய்ய உதவுகிறது. முடியை மென்மையாக மாற்றுகிறது . வேர்க்கால்களுக்கு  ஈரப்பதத்தை தந்து முடி உடைவது, வறண்டு விடுவது போன்றவற்றில் இருந்து காக்கிறது. ஆளி விதைகளை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்வதாலும், தலை முடி பராமரிப்பில் பயன்படுத்துவதாலும், முடிக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்கின்றன. முடி வளர்ச்சிக்கு சிறந்த ஒரு பொருளாக பார்க்கப்படுகிறது. ஆளி விதைகளை பயன்படுத்துவதால் முடி நீர்ச்சத்தோடு இருக்க உதவுகிறது. இளநரையை தடுக்கிறது. நுனி முடி வெடிப்புகள் ஏற்படாமல் பார்த்து கொள்கிறது.

ஆளி விதை ஹேர் ஜெல் :
இத்தனை நன்மைகளை கொண்ட ஆளி விதைகளை கொண்டு ஒரு ஹேர் ஜெல் தயாரிப்பதால் முடி அதிக ஆரோக்கியத்துடன் வளர முடியும். இதன் தயாரிப்பை பற்றி இப்போது விளக்கமாக பார்க்கலாம். இதனை தயாரிப்பது மிகவும் கடினம். ஆனால் இதன் பயன்பாடு மிகவும் நல்ல பலனை தரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. 

தேவையான பொருட்கள்:
 . 2 டேபிள் ஸ்பூன் முழு ஆளி விதைகள் 
 . 1 கப் தண்ணீர் 
 . கற்றாழை ஜெல்(தேவைப்பட்டால்)
 . அத்தியாவசிய எண்ணெய் (நறுமணத்திற்கு தேவைப்பட்டால்)

செய்முறை:
 . தண்ணீரை அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவும்.
 . ஆளி விதைகளை தண்ணீரில் போடவும்.
 . ஜெல் தன்மை வரும் வரை தொடர்ந்து  கிளறி கொண்டே இருக்கவும். 
 . கொஞ்சம் கிளறாமல் விட்டாலும் விதைகள் பாத்திரத்தோடு ஒட்டிக் கொள்ளும். 
 . அதிக பட்சம் 5 நிமிடங்கள் அடுப்பில் இருக்கட்டும்.
 . அதிகமாக குழைய வேண்டாம்.
 . குழைந்தால் ஜெல்லை வடிகட்டி எடுக்க முடியாது. கட்டிகளாக  மாறி விடும்.
 . நுண்ணிய துளைகள் கொண்ட பில்டரில் ஜெல்லை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
 . இந்த ஜெல்லை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கொள்ளவும்.
 . ஈரப்பதத்தை அதிகரிக்க, தேவைப்பட்டால் கற்றாழை ஜெல்லை இதனுடன் சேர்த்து கொள்ளவும். 
 . வாசனைக்காக, விருப்பமான எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஆலிவ் எண்ணெய், லாவெண்டர் எண்ணெய், சந்தன எண்ணெய் போன்றவற்றில் எதாவது ஒன்றை பயன்படுத்தலாம்.
 . நன்றாக குலுக்கி கொள்ளவும்.
 . மற்ற ஹேர் ஜெல் போல இதனை பயன்படுத்த தொடங்கலாம்.
 . ஆளி விதை ஜெல்லை பயன்படுத்தி அழகான தலை முடியை பெறலாம். 

ஆளி விதை எண்ணெய்:
ஆளி விதை எண்ணெய் முடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது. 
 . ஆளி விதை எண்ணெய்யை சூடாக்கி தலையில் நன்றாக தடவி கொள்ளுங்கள். 
 . தடவியபின் மென்மையாக மசாஜ் செய்யுங்கள். 
 . பிறகு ஒரு பெரிய துண்டை வெந்நீரில் நனைத்து பிழிந்து தலையில் சுற்றி கொள்ளுங்கள். 
 . 30 நிமிடம் கழித்து  மென்மையான ஷாம்பு கொண்டு தலையை அலசுங்கள். 
 . வாரத்திற்கு 2 முறை இதனை பின்பற்றலாம். 
 . ஆளி விதை எண்ணெய் மற்றும் துண்டில் இருக்கும் சூடு தலைக்குள் ஊடுருவி வேர்க்கால்களை புத்துணர்ச்சி அடைய செய்கின்றன. இதனால் முடி வளர்ச்சி ஊக்குவிக்கப்படுகிறது.

ஆரோக்கியமான முறையில் தலை முடியை வளர்க்க இயற்கையான பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது நல்ல பலனை தரும்.