டீம்வொர்க் பற்றிய  ஒரு பதிவு 

இன்றைய போட்டி மிகுந்த சமுதாயத்தில் குழுக்களாக வேலை செய்வது அலுவலகங்களில் அதிகமாக காணப்படுகிறது.

டீம்வொர்க் பற்றிய  ஒரு பதிவு 

2க்கும்  மேற்பட்டவர்கள் இணைந்து ஒரு குழுவாக வேலை செய்யும் போது அவர்களின் உழைப்பிற்கான பலன்கள் நேர்மறையாக இருக்கிறதா அல்லது எதிர்மறையாக இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இந்த டீமஒர்க்கின் பலன்கள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

படைப்பாற்றல் மற்றும் அறிந்துகொள்ளுதல் அதிகமாகிறது:
குழுக்களாக வேலை செய்யும்போது படைப்பாற்றல் அதிகரிக்கிறது. ஒரே பழைய சிந்தனைகள் ஒழிக்கப்பட்டு புது புது வடிவங்கள் எழுகின்றன. குழுவில் உள்ள தனி நபர்களின் சிந்தனைகளை ஒன்று சேர்க்கும் போது வலிமையான தீர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.

ஒவ்வொரு தனி நபரின் அனுபவங்கள் வித்தியாசமானது. அதனை பற்றி குழுக்களிடையே பகிரும் அனைவருக்கும் பல விதமான நுணுக்கங்களை கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. 

ஒவ்வொருவரும் தனியே ஒரு வேலையை செய்யும்போது ஏற்படும் தளர்ச்சி குழுக்களாக செய்யும்போது உற்சாகமாக மாறுகிறது. ஒருவரின் புதுப்புது கண்டுபிடிப்புகளை பற்றி தெரிய வரும்போது அனைவரும் புத்துணர்ச்சி அடைகிறார்கள். இதன்மூலம் தனி நபரின் வளர்ச்சியும் குழுக்களின் வளர்ச்சியும் அதிகரிக்கிறது.

கலவையான வலிமைகளை உடையது:
குழுவில் உள்ள ஒவ்வொருவரின் திறமையால் மற்றவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். ஒருவரின் திறமை படைப்பாற்றலின் இருக்கும், மற்றவரின் திறமை நிர்வாகத்தில் இருக்கும், இன்னொருவரின் திறமை தொழில்நுட்பத்தில் இருக்கும். இதனை ஒருவர் மற்றவருடன் பகிருவதால் அனைவரின் திறனும் அதிகரிக்கும். குழுவில் ஒருவரை ஒருவர் சார்ந்திருப்பதால் ஒரு முழுமையான வேலை  திறனும் அடங்கியிருக்கும். ஒவ்வொருவரின் திறனையும் நுணுக்கமாக ஆராய்ந்து மேம்படுத்தும் குழு இன்னும் வலிமையாக மாறும். குழுவில் உள்ள ஒருவர் மற்றவரை காட்டிலும் அதிக அறிவாற்றல் மிக்கவராக இருக்கும்போது, அறிவாற்றல்  குறைந்தவருக்கும், அவருக்கு இணையாக மாற வேண்டும் என்ற எண்ணம் இயல்பாக வரும்.இதன்மூலம் அவரின் செயல் திறனில் ஒரு முன்னேற்றம் காணப்படும்.
 
நம்பிக்கையை வளர்க்கிறது :
ஒருவர் மற்றவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையால் அவர்களின் உறவு மேம்படுகிறது. சில நேரங்களில் ஏற்படும் வாக்குவாதங்களை தவிர, மற்ற நேரங்களில் அவர்களின் நெருக்கம் அதிகமாகவே காணப்படும். நம்முடன் வேலைபார்ப்பவர்களிடம் நமக்கு நம்பிக்கை வரும்போது உறவுகள் பலமாவதால், சின்ன சின்ன பிரச்சனைகள் காணாமல் போகின்றன.
 
குழுவில் உள்ளவர்களை நம்புவதால் ஒரு வித பாதுகாப்பு கிடைக்கிறது . இதனால் நமக்கு தோன்றும் எண்ணங்களை  தைரியமாக சொல்ல முடிகிறது. குழுவில் இருப்பவர்களின் மனதை அறிய முடிவதால் அவர்களை உற்சாகப்படுத்துவது எளிதாகிறது. கடினமான ப்ரொஜெக்ட்களில் தகவல் பரிமாற்றம் மிகவும் முக்கியம். உறவு பாலம் சீராக இருக்கும் குழுக்களில் இதற்கான தீர்வுகள் சுலபமாக கிடைக்கப்பெறும்.

ஒருவர் மீது மற்றவருக்கு நம்பிக்கை இல்லாத குழுவில், கொடுக்கப்பட்ட வேலையை  செய்ய முடியாமல் போகும் நிலையும் உண்டாகும். சிறந்த குழுக்கள், அவர்கள் குழுவில் உள்ள ஒவ்வொருவரையும் வலிமை அடைய  செய்து ஒரு உயர்ந்த இடத்தை அடையலாம். தோல்வியும் வெற்றியும் குழுவில் உள்ள 
அனைவரையும் பாதிக்கும். குழுவில் உள்ள  ஒவ்வொருவருக்கும் மற்றவரின் தனிப்பட்ட திறமையில் நம்பிக்கையை ஏற்படுத்தும். 

மோதலுக்கான தீர்வுகளை  கற்று கொடுக்கும்:
தனித்தன்மை வாய்ந்த பலர் ஒரு குழுவில் இருக்கும்போது மோதல்களும் தவிர்க்க முயாதவை. ஒவ்வொரு தொழிலாளியும் ஒவ்வொரு வேலை ஸ்டைலை கொண்டிருப்பர். ஒவ்வொரு பின்புலம் இருக்கும் .  இந்த வேற்றுமைகள் சிறந்த வேலை தரத்தை தருவது போல், சில நேரத்தில் சில  சீற்றங்களையும் காணலாம். இதனால் மோதல்கள் ஏற்படலாம். இத்தகைய மோதல்கள் வரும்போது, தொழிலாளர்கள் அவர்களுக்குள்ளாகவே இதனை தீர்த்து கொள்வது அவசியம். இதனை மேலதிகாரிகளிடம் கொண்டு செல்வது நேரத்தை வீணடிக்கும். தேவையில்லாத சிக்கல்களும் ஏற்படும். இந்த மோதல்களுக்கு தீர்வுகளை என்னவென்று  கற்பதே சிறந்த மேலதிகாரி ஆவதற்கான முதல் தகுதியாகும்.

முதலாளித்தன்மையை வெளிப்படுத்தும் :
தொழிலாளர்களுக்கு அவர்களின் படைப்புகளில் ஒரு வித பெருமை ஏற்படுகிறது. தடங்கல்களை எதிர்கொள்வதும் குறிப்பிட்டு சொல்ல தகுந்த படைப்பாற்றலுடன் கூடிய வேலைகளை செய்வதும் குழுவில் உள்ளவர்களுக்கு ஒரு நிறைவை தருகிறது. அவர்கள் அலுவலகத்தின் குறிக்கோளை அடைவதை நோக்கிய செயல்கள் அலுவலகத்துடன் அவர்களை இணைக்கிறது. இதன்மூலம் விசுவாசமும், ஆத்ம திருப்தியும் கிடைக்கிறது.

குழுவாக இணைந்து வேலை செய்வதால் தொழிலாளர்கள் மட்டுமல்ல, நிர்வாகமும் பயனடைகிறது. வேலையிடத்தில் தொடர்பு  அதிகமாகும்போது  தொடர்ந்து அந்த நிறுவனத்தில் வேலை புரிவதற்கான எண்ணம் தொழிலாளர்களுக்கு தோன்றுகிறது. பொதுவாக வேலையை  மாற்ற விரும்புவோரின் காரணம், சம்பள உயர்வு மற்றும் அவர்களுக்கான அங்கீகாரம் கிடைக்கப்படுவதில்லை போன்றவை தான். குழுவாக இணைந்து வேலை செய்யும்போது அவர்களின் திறமை மற்றவர்களிடம் அங்கீகரிக்கப்படும்.

ரிஸ்க் எடுப்பது ஆரோக்கியமானது:
ஒற்றுமையே பலம் என்பது தான் இந்த குழுவேலைபாட்டின் தத்துவமாகும். தனியாக இயங்கும் ஒருவர், அவர் வேலையை தவிர வேறு எந்த வேலையிலும் தலையிடுவதில்லை. ஒரு வேலையில் ஏற்படும் பிரச்சனைக்கு அந்த ஒருவர் மட்டுமே பொறுப்பாளியாகிறார். இதே குழு வேலைப்பாட்டில், நல்லது கெட்டது இரண்டுமே  அனைவரையும் பாதிக்கும். 

குழு வேலைப்பாட்டில் வேலை செய்பவர்கள் ரிஸ்க் எடுக்கும் தைரியத்தை கொண்டிருப்பர் . குழுவில் உள்ள மற்றவர்களின் ஆதரவால் தோல்வியை  தாங்கும் மன பக்குவம் அவர்களுக்கு உண்டாகும். அதே சமயத்தில், இந்த ரிஸ்கால் வெற்றி கிடைத்தால், அது அவர்களின் உறவை மேம்படுத்தும். அந்த வெற்றி அவர்களை இன்னும் பல சாதனைகளை செய்ய உத்வேகப்படுத்தும். 

ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் இருந்து யோசிக்க வைக்கும் பழக்கம் இந்த குழு வேலை பாட்டில் இருப்பது ஒரு முக்கிய அம்சமாகும். ஒரு விஷயத்தை  முற்றிலும் வேற கோணத்தில் பார்க்கும் பழக்கமே பல்வேறு வெற்றிகளை தேடி தரும். ஆகவே குழுக்களாக இணைந்து வேலை புரிவோம்!