பிரியாணி நல்லதா கெட்டதா ?

நாம் இந்த பதிவில் பெரும்பான்மை மக்களால் தங்கள் விருப்பமான உணவு என்று கூறப்படும் பிரியாணியை பற்றி பார்க்க போகிறோம்.

பிரியாணி நல்லதா கெட்டதா ?

சின்ன குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு உணவு இந்த பிரியாணி ஆகும். ட்ரீட் என்றாலே இளைய தலைமுறையினருக்கு பிரியாணி சாப்பிடுவது தான் என்ற காலம் தான் இப்போது. பிரியாணியின் எந்த விஷயம் அனைவரையும் கவர்கிறது? அதன் மணமா? சுவையா ?  நிறமா? இதை வைத்து  ஒரு பட்டிமன்றமே வைக்கலாம். 

இந்த பிரியாணி ஒரு அரோக்கியமான உணவா? ஆம் நிச்சயமாக இது ஒரு ஆரோக்கிய உணவு தான். அதனை பற்றிய விளக்கம் தான்  இந்த தொகுப்பு.


தினமும் டிபன் பாக்ஸ் உணவை சாப்பிடும் நாம் ஒரு நாள் பிரஷ்ஷாக ஒரு உணவு சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அந்த ஆசைக்கு 100% பொருத்தமான ஒரு உணவு பிரியாணி. இதன் மணம் நமது உடலையும் மனதையும் புத்துணர்ச்சி அடைய வைக்கிறது. பிரியாணி செய்ய பயன்படுத்தும் பொருட்கள் அரிசி, வாசனை மிகுந்த மசாலா பொருட்கள்,  காய்கறிகள்  அல்லது, ஆட்டு இறைச்சி, கோழி இறைச்சி, முட்டை  போன்றவை. மேலே குறிப்பிட்ட எல்லா பொருட்களுக்கும் நமது உடல் ஆரோக்கியத்தை பெருக்குவதில் பெரும் பங்கு உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஆரோக்கியம் தரும் பொருட்களின் கலவையில் உருவாகும் பிரியாணியில் ஆரோக்கியத்திற்கு குறைவிருக்காது.

பிரியாணியின் நன்மைகள் :
பொதுவாக அசைவ பிரியாணி எலும்புகளை உறுதியாக்கும். சிக்கெனில் நியாசின் என்ற வைட்டமின் பி சத்தின்  ஒரு வகை அதிகமாக இருக்கிறது. இது புற்று நோயை உருவாக்கும் அடிப்படை கூறுகளை எதிர்த்து போராடுகிறது. 
சிக்கன் பிரியாணியில் வைட்டமின் b6 அதிகமாக இருப்பதால் வளர்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்துகிறது. சிக்கனில் உள்ள  பாஸ்போரோஸ் பற்களை வெண்மையாகவும், உறுதியாகவும் வைக்கிறது. வாய் துர்நாற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.

சிக்கனில் செலினியம் அதிகமாக இருப்பதால் நோயெதிர்ப்பு மண்டலத்தை  காக்கிறது. தைரொய்ட் ஹார்மோன் சுரப்பதை சீராக்குகிறது. 

சிறுநீரகம், கல்லீரல் மற்றும் இதயத்தின் சீரான செயல்பாடுகளுக்கு பிரியாணி உதவி புரிகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு உடலை எரியூட்ட  கார்போஹைரேட் ,புரதம், கொழுப்புசத்து, வைட்டமின் மற்றும் தாது பொருட்கள் தேவை. இவை அனைத்தையும் ஒரே உணவு கொடுக்குமாயின் அது பிரியாணியாகத்தான் இருக்க முடியும். 

பிரியாணியில் சேர்க்கப்படும் அரிசி கார்போஹைட்ரேட்டின்  ஆதாரமாகும். அதில் சேர்க்கப்படும் சிக்கன், மட்டன், அல்லது காய்கறிகளில் புரத சத்துக்கள் இருக்கும். வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் ஒட்டுமொத்த சத்துக்களுக்கு காய்கறி பிரியாணியை சுவைக்கலாம். அதிகமான காய்கறிகள் அதிகமான வைட்டமின் சத்துக்களை கொடுக்கும்.

ஒரு ஆரோக்கியமான பிரியாணி செய்வதற்கான வழிகளை இப்போது பார்க்கலாம்.

ஆரோக்கியமான பிரியாணி :
1. எண்ணையின் அளவை குறைத்து பயன்படுத்தலாம். வெண்ணை போன்ற கொழுப்பு அதிகமுள்ள பொருட்களுக்கு மாற்றாக ஆலிவ் எண்ணையை பயன்படுத்தலாம். அசைவ உணவுகளை எண்ணையில் பொரித்து போடுவதற்கு மாற்றாக ஆவியில் அதன் சாறுடன்  வேகவைத்து பயன்படுத்தலாம்.  இறைச்சியை அதிகமாக அல்லது அழுத்தமாக  வாட்டுதல் (broiling or braising ) கூடாது.
2. பட்டை தீட்டிய அரிசியை விட  முழு தானியமாகிய பழுப்பு அரிசியை பயன்படுத்தலாம். இதில் வைட்டமின் பி மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளது உணவிற்கு அதிக சுவையை கொடுக்கும்.
3. முட்டையின் மஞ்சள் கருவை  விலக்கி வெள்ளை கருவை மட்டும் , பயன்படுத்துவதால் உணவிற்கு புரத சத்து கிடைக்கப்பெறும்.
4. புதினா, கீரை, கொத்துமல்லி ப்ரோக்கோலி மற்றும் காலி பிளவர் போன்றவற்றை பயன்படுத்துவதால் நார்ச்சத்து மற்றும் அதிக ஊட்டச்சத்துகள் கிடைக்கும்.
5. சைவ பிரியர்கள் இறைச்சி அல்லது சிக்கனுக்கு பதில் சோயாவை பயன்படுத்தலாம். சோயாவில் உள்ள பைதோ ஈஸ்ட்ரோஜென் பெண்களுக்கு பலமான எலும்புகளை தருகிறது. மெனோபாஸ் காலகட்டத்தில் அவர்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க உதவுகிறது. பைதோ ஈஸ்ட்ரோஜெனில் புற்றுநோய் மற்றும் இதய நோயை எதிர்க்கும் ஆற்றல் உள்ளது. இது இறைச்சிக்கு ஒரு சிறந்த மாற்று.
6. பிரியாணியில் பருப்புகளை சேர்க்கும்போது நார்ச்சத்து அதிகமாகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் பருமன் உடலை பெற்றவருக்கு இந்த உணவு நல்ல பலனை கொடுக்கும். பருப்புகள் சேர்ப்பதால், வயிறு நிறைந்த உணர்வு இருக்கும். அரிசியும் பருப்பும் இணைவதால் ஒரு பூரண புரத சத்து கிடைக்கும்.  
7. காய்கறிகள் அதிகமாக சேர்ப்பதால், வைட்டமின்களும் மினரல்களும் உடலுக்கு கிடைக்கிறது. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் அடிப்படை கூறுகளை எதிர்த்து போராடுகிறது.
8. இஞ்சி ,பூண்டு,வெங்காயம் மற்றும் மசாலா பொருட்களில் புற்று நோயெதிர்ப்பு சக்திகள் உள்ளதால் அவற்றை பயன்படுத்துவது சிறந்தது. இவைகள் இல்லாமல் பிரியாணியின் சுவை பூரணம்  அடைவதில்லை.

மேற்கூறிய வழிகளில் பிரியாணியை தயாரித்து உண்பதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை அடையலாம். ஆனால் அதில் சில தீய விளைவுகளும் ஏற்படும்  .

தீய விளைவுகள்:
1. கண  உணவாக இருப்பதால்  செரிமானம் தாமதம் ஆகலாம்.
2. அல்சர் அல்லது இரைப்பை கோளாறுகள் உள்ளவர்கள் இதனை அதிகமாக உண்ணுதல் கூடாது.
3. கலோரி அதிகமான உணவு என்பதால் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புண்டு.

மேற்கூறிய தீங்குகளுக்கும் மாற்று இருக்கிறது. பிரியாணியுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் காரம் அதிகம் பாதிப்பதில்லை.  பிரியாணி சாப்பிட்டவுடன் வெந்நீர் அல்லது சூடான தேநீர்  அருந்துவதால் செரிமான பிரச்னை தீர்க்கப்படுகிறது. தேவையற்ற கொழுப்புகளும் கரைந்து வெளியேறுகிறது. 

என்ன நேயர்களே ! பிரியாணியின் நன்மை தீமைகளை தெரிந்து கொண்டீர்களா? ஆரோக்கியமான முறையில் பிரியாணியை சமைத்து தேவையான அளவு உண்டு  ஆனந்தம் பெறலாமா ?