விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி?

எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி விழாவை வீட்டில் எப்படி கொண்டாடலாம் என்பதை தெரிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது எப்படி?

ஆவணி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை சதுர்த்தி திதி “விநாயகர் சதுர்த்தி” என்று கொண்டாடப்படுகிறது. பார்வதி தேவி, களிமண் சிலை செய்து  அதற்கு உயிர்  கொடுத்த இந்த நாளை ,  விநாயகரின்  பிறந்த நாளாக கொண்டாடுகிறோம்.  இந்த  நாளில் விநாயகரை தொழுவதால் நமது  சங்கடங்கள்  தீரும் என்பது நம்பிக்கை. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி கொண்டாடப்படுகிறது. 

பண்டிகைக்கு ஒரு நாள் முன்னர் அல்லது பண்டிகை அன்று காலையில்  வீடு முழுவதும் சுத்தம் செய்து  வீட்டின் தரையை கழுவி அல்லது துடைத்துக் கொள்ளவும். 

வீட்டு வாசலில் கோலம் போடவும். வீட்டின் வாசலில் பூக்கள் மற்றும் மாவிலை தோரணம் கட்டவும். 

தலைக்கு குளித்துவிட்டு , புதிய ஆடைகள் அல்லது  சுத்தமான ஆடைகள் அணிந்து  ஒரு ஸ்டீல் அல்லது சில்வர் தட்டில் அரிசியை நிரப்பி மார்க்கெட் சென்று அங்கு விற்கப்படும்  களிமண் பிள்ளையாரை வாங்கவும். அரிசி  நிரப்பிய தட்டில் விநாயகரை வைத்து அங்கிருந்து  உங்கள் இல்லத்திற்கு  எடுத்து வரவும். விநாயகர் சிலையை வாங்கும்போது விரிசல் எதுவும் இல்லாதபடி பார்த்துக் கொள்ளவும். மேலும் விநாயகரின் தந்தம் வலது பக்கம் இருக்கும்படி பார்த்து வாங்கவும். வீட்டிற்குள் விநாயகரை அழைத்து வரும் போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாக அவரை வரவேற்கவும்.

வாங்கி வந்த விநாயகர் சிலையை வீட்டின் பூஜை அறையில் ஒரு தட்டில் அல்லது வாழை இலையில் வைக்கவும். 

விநாயகர் சிலையின்  இரண்டு பக்கத்திலும் குத்து விளக்கு ஏற்றவும் . இரண்டு பக்கத்திலும் வாழை மரத்தை விழாதபடி  கட்டி வைக்கவும்.

நெய்வேத்யம் செய்வதற்கான பழங்களை 3,5,7,9 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் தேர்ந்தெடுத்து வைத்துக் கொள்ளவும். பூஜைக்கு பயன்படுத்தக்கூடிய பூகைளையும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளலாம் . வெற்றிலை, பாக்கு , வாழைப்பழம் , தேங்காய் ஆகியவற்றை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

விநாயகர் சதுர்த்தி அன்று காலை முதல் பூஜை முடியும்வரை விரதம் இருப்பது மிகவும் நல்லது. இதனை “ஒருபொழுது” என்று கூறுவர். தண்ணீர் கூட பருகாமல் விரதம் இருக்கலாம். 

ரோஜா, சாமந்தி , மல்லிகை போன்ற மலர்களை புஜையில் வைத்து வழிபடலாம். குறிப்பாக விநாயகருக்கு பிடித்தமான அருகம்புல் பூஜையில் அவசியம் இருக்க வேண்டும். கொய்யா , மாதுளை, ஆப்பிள், அன்னாசி , ஆரஞ்சு போன்ற பழங்களை விநாயகருக்கு படைக்கலாம். வேர்க்கடலை, சோளம், கரும்பு போன்றவையும் விநாயகருக்கு உகந்தது.

கடவுளுக்கு அளிக்க வேண்டிய நெய்வேத்யம் அல்லது உணவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. விநாயகருக்கு பிடித்தமான லட்டு, மோதகம், கொழுக்கட்டை , சுண்டல், அவல்  போன்றவை நெய்வேத்யமாக படைக்கப்படலாம்.

இவை அனைத்தையும் தயார் செய்த பிறகு, சுப முகூர்த்த நேரத்தில் விநாயகருக்கான பூஜையை தொடங்கலாம். உங்கள் மொழியில் கடவுள் துதிகளை பாடி விநாயகரை மகிழ்விக்கலாம். 108 முறை விநாயகர் நாமத்தை துதிக்கலாம். இறுதியாக ஆரத்தி காண்பித்து பூஜை முடிக்கலாம். 

விநாயகருக்கு படைத்த உணவை உண்பதற்கு முன் சிறு அளவு உணவை காகத்திற்கு வைக்கலாம். 

பிறகு உங்கள் வீட்டில் உள்ளவர்கள்,  அக்கம் பக்கத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இனிப்புகளை வழங்கலாம். பிறகு அனைவரும்  உணவு உண்டு மகிழ்ச்சியாக பண்டிகையை கொண்டாடலாம்.

விநாயகர் சிலையை உங்கள் இல்லத்தில் ஒரு நாள் முதல் 7 நாட்கள் வரை வைத்திருக்கலாம். விநாயகர் சிலை வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நெய்வேத்யம் செய்து இறைவனுக்கு படைக்கலாம். 

பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் விநாயகர் சிலைக்கு இறுதியாக பூஜை செய்து , வீட்டில் இருந்து எடுத்து சென்று அருகில் இருக்கும் கிணறு, குளம், ஆறு, கடல் போன்ற இடத்தில் சிலையை கரைத்துவிடலாம்.  

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நாள் 22, ஆகஸ்ட், சனிக்கிழமை ஆகும். அன்று விநாயகர் வழிபாடு நடத்த உகந்த நேரம் காலை 10.29 மணி முதல் மதியம் 01.03 வரை. ஆகவே நீங்கள் விநாயகர் பூஜையை இந்த நேரத்தில் நடத்தலாம். பூஜையின்போது விநாயகர் மந்திரங்களை சொல்வது நன்மையை மேம்படுத்தும். 

விநாயகர் சதுர்த்தியில் பூஜை செய்வதனால் ஒருவரின் துயர் தீர்ந்து மகிழ்ச்சி பெருகும். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை வழிபடுவதால் உங்கள் பிரச்சனைகள் விலகி நன்மை நடக்கும். ஆகவே ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை சிறப்பாக கொண்டாடுவதால் ஒருநபரின் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம். 

ஒவ்வொரு மாதமும் சதுர்த்தி திதி அன்று விநாயகரை வழிபடலாம் என்றாலும் ஆவணி மாதம் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி மிகவும் சிறப்பான ஒரு நாளாகும். ஆகவே இந்த நாளில் விநாயகரை வழிபாடு அனைவரும் எல்லா நலமும் வளமும்  பெற வேண்டும்.