ஆண்களின் எண்ணெய் சருமம் நீங்க எளிய வழிகள்

ஆண்களுக்கான எண்ணெய் சருமம் பொதுவாக பலராலும் ஒரு பிரச்சனையாக பார்க்கப்படுவதாகும். இந்த எண்ணெய் சருமத்தை போக்க பலரும் பல வழிகளை கடைபிடிக்கின்றனர்.

ஆண்களின் எண்ணெய் சருமம் நீங்க எளிய வழிகள்

அழகும் அழகு சார்ந்த குறிப்புகளும் பெண்களுக்கு மட்டுமே என்ற காலம் இப்போது  மலையேறி விட்டது. பெண்களுக்கு நிகராக ஆண்களுக்கும் பல கிரீம்களும், முக பூச்சுகளும் சந்தையில் வந்த வண்ணம் உள்ளது.   ஆனாலும் நமது சருமத்தை இயற்கையான முறையில் பாதுகாப்பது  சிறந்தது. இங்கும் சில முறைகள் கொடுக்கப்பட்டுள்ளன . இந்த வழிகளை கடை பிடித்து எண்ணெய் இல்லாத, பருக்களில்லாத , தெளிவான சருமத்தை அடையுங்கள்.  

a. சருமத்தைப் பாதுகாக்க சில பொது விதிமுறைகள்:
1. தண்ணீர்:
தினமும் 10-12 டம்பளர் தண்ணீர் குடியுங்கள்.மது பானங்கள்  பருகுவதை குறைத்து கொள்ளுங்கள்.

2. உணவைக் கண்காணியுங்கள் :
உங்கள் தினசரி உணவில் சாலட் மற்றும் பழ வகைகளை இணைத்து கொள்ளுங்கள். எழுமிச்சை சாறு, தேங்காய் நீர் போன்றவற்றை தினமும் பருகுங்கள். வறுத்த, பொரித்த உணவுகள் மற்றும் சுவையூட்டப்பட்ட குளிர் பானங்கள் மற்றும் சோடா இவற்றை தவிர்த்து  விடுங்கள்.

3. உடைகள்:
பருத்தி,மல்,சணல்  ஆகியவற்றால் செய்த ஆடைகளை உடுத்திடுங்கள். இவை வெயிலுக்கு ஏற்ற காற்றோட்டத்தையும் வெளிச்சத்தையும் கொடுக்கும்.

4. உடற்பயிற்சி:
நீங்கள் எண்ணெய் சருமம் உடையவராயின்,உங்கள் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் நச்சுக்களை வெளியேற்ற  வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும்.

5. வளர்சிதை: 
உடலின்  வளர்சிதை மாற்றத்திற்கும் எண்ணெய் சருமத்திற்கும் தொடர்பு உள்ளது. வளர்சிதை மாற்றத்தால் மலச்சிக்கல் ஏற்படும்போது முகத்தில் கட்டிகளும், பருக்களும் தோன்றும்.இதனை குறைக்க பச்சை காய்கறிகளும்,பழங்களும் அதிகமாக உட்கொள்ள வேண்டும்.

தலையில் பொடுகு  அதிகமாக இருக்கும் போது முகத்தில் கட்டிகள் வர வாய்ப்பிருக்கிறது. ஆகையால் முதலில் பொடுகுக்கான சிகிச்சை செய்தவுடன் தெளிவான சருமத்திற்கு சிகிச்சை பெற வேண்டும்.

b. எண்ணெய் வழிவதைக் குறைக்க:

தேவையான பொருட்கள்:
200 மிலி - ரோஸ் வாட்டர்
2 டி.ஸ்பூன் - தூளாக்கப்பட்ட கற்பூரம்    

செய்முறை:
தூளாக்கப்பட்ட கற்பூரத்தை ரோஸ் வாட்டரில்  கலந்து காற்று புகாத பாட்டிலில் ஊற்றி பிரிட்ஜில் வைக்கவும். இதன்மூலம் ஒரு நாளைக்கு 3-4 தடவை முகத்தை  துடைக்க வேண்டும். இப்படி செய்வதால், எண்ணெய் பதம் குறைவதோடு தோலில் பாக்டீரியாவின் ஊடுருவலை தடுக்கிறது. இதனால் தோல் தொற்று ,அரிப்பு போன்றவை நீங்கி பருக்கள் மறைகிறது.
 
c. ஆண்களின்  சருமத்தில் கட்டிகள் மறைய:
முகத்தில்பருக்கள் தோன்றும்போது அவற்றை போக்குவதற்கு , கிள்ளவோ அல்லது அதனை பிழிந்து எடுக்கவோ கூடாது. இந்த மாஸ்க் செய்வது எப்படி என்று அறிந்து பயன் படுத்தி பாருங்கள்.

தேவையான பொருட்கள்:
4 டேபிள் ஸ்பூன் முல்தானி  மீட்டி
1/2 டீஸ்பூன் கற்பூரம்
2 டீஸ்பூன் புதினா பேஸ்ட்
2 கிராம்பு (பொடியாக்கியது)
1 டீஸ்பூன் சந்தன தூள்
ரோஸ் வாட்டர்  தேவையான அளவு

செய்முறை:
மேலே கூறி எல்லாவற்றையும் கலந்து  ஒரு பேஸ்ட் போல் மாற்றவும். முகத்தை நன்றாக கழுவவும்.பின்பு நீங்கள் தயார் செய்த பேஸ்டை முகத்தில்  மாஸ்க் போல் போடவும். நன்றாக காய விடவும்.முழுவதும் காய்ந்த பிறகு முகம் சற்று இருக்கமாக இருப்பது போல் தோன்றும். சிறிது நேரத்திற்கு பிறகு நல்ல குளிர்ந்த நீரால் முகத்தை  கழுவவும். பிறகு துண்டை கொண்டு முகத்தின் ஈரத்தை   ஒத்தி எடுக்கவும். 

தொடர்ந்து 10நாட்கள் இப்படி செய்து வரவும். முடிவில் நீங்கள் தெளிவான முகத்தின் சொந்தக்காரர் ஆவீர்கள்.

d. எண்ணெய் சருமத்தை நீக்கி கரும்புள்ளி மற்றும் வெண்புள்ளிகளை முற்றிலும் போக்குவதற்கு:
நம்மில் பலர் சருமத்தை ஒழுங்காக பராமரிக்காமல் சருமத்தில் வெண்புள்ளிகளும் கரும்புள்ளிகளும் தோன்ற ஆரம்பிக்கின்றன. இவை வளர்ந்து  பருக்கள் மற்றும் கட்டிகள் ஆகின்றன. இதன் மூலம் முகத்தின்  அழகு கெடுகிறது. சருமத்தை சுத்தமாகவும் தெளிவாகவும் வைக்க இந்த முறையை பின்பற்றுங்கள்.

தேவையான பொருட்கள்:
4 டேபிள்ஸ்பூன் ஆரஞ்சு தோல் பவுடர்
4 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை  தோல் பவுடர்
50கிராம் சைனா களிமண்
காய்ந்த வேப்பிலை தூள் ஒரு  கையளவு
5 டேபிள்ஸ்பூன் காய்ந்த அரிசி மாவு
புதினா சாறு தேவையான அளவு

செய்முறை:
மேலே கூறிய எல்லா காய்ந்த பொருட்களையும் ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போடவும். தேவை படும் போது அந்த கலவையில் இருந்து  1 டீஸ்பூன் எடுத்து புதினா சாறுடன் கலந்து முகத்தில் தடவவும். ஓரளவு காய்ந்ததும் முகத்தில் தண்ணீர் தெளித்து நன்றாக தேய்க்கவும். இதன் மூலம் கரும்புள்ளிகளும் வெண்புள்ளிகளும் வெளியேற்றப்பட்டு எண்ணெய் நீங்கி முகம் பளிச்சென்று இருக்கும்.