உச்சந்தலையை ஸ்க்ரப் செய்வதால் உண்டாகும் நன்மைகள்

உங்கள் உச்சந்தலையை ஆரோக்கியமாகவும் சுத்தமாகவும் நிர்வகிப்பதால் வலிமையான மற்றும் ஆரோக்கியமான கூந்தல் உருவாகிறது.

உச்சந்தலையை ஸ்க்ரப் செய்வதால் உண்டாகும் நன்மைகள்

உங்கள் உச்சந்தலை அசுத்தமாக அழுக்குகள் நிறைந்து காணப்பட்டால் , பல்வேறு ரசாயனங்கள் நிறைந்து இருந்தால் ஆரோக்கியமான முடி வளர்ச்சி என்பது ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.

சில நேரங்களில் வெறும் ஷாம்பூ பயன்படுத்துவதால் மட்டும் உச்சந்தலை சுத்தமாக இருப்பதில்லை. உங்கள் உச்சந்தலைக்கு புத்துணர்ச்சி ஊட்டுவதற்கு இன்னும் சில நிலைகளை கடைபிடிக்க வேண்டியுள்ளது. உங்கள் உச்சந்தலை பிசுபிசுப்பாக இருப்பதாகவும், அதிக எண்ணெய்ப் பசையுடன் இருப்பதாகவும் நீங்கள் உணர்ந்தால் இன்னும் அதிக முறை உங்கள் கூந்தலை சுத்தம் செய்ய வேண்டும் என்று உணர்ந்தால், உங்கள் உச்சந்தலைக்கு ஒரு சிறப்பான ஸ்க்ரப் தேவை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். 

உச்சந்தலை ஸ்க்ரப் :

உங்கள் உச்சந்தலையை புத்துணர்ச்சியூட்டி ஆழமான முறையில் சுத்தம் செய்ய நீங்கள் உச்சந்தலை ஸ்க்ரப்பிங் முறையை முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு நீங்கள் ஒரு அற்புதத்தை உணர முடியும்.  இந்த பதிவில் உச்சந்தலையை எவ்வாறு ஸ்க்ரப் செய்வது, அதன் நன்மைகள் என்ன என்பது பற்றி உரையாடவிருக்கிறோம்.
 
உச்சந்தலை ஸ்க்ரப்பிங் என்றால் என்ன?
உச்சந்தலை ஸ்கரப் செய்வது என்பதை எளிய முறையில் உணர்த்த வேண்டும் என்றால், உச்சந்தலையின் மேற்படலத்தைப் பிரிப்பது என்பதாகும். நம்முடைய உச்சந்தலையின் ஆரோக்கியம் , நம்முடைய கூந்தலின் ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை நேரடியாக பாதிக்கிறது. நமக்கு ஆரோக்கியமான மற்றும் வலிமையான தலைமுடி வேண்டுமென்றால் ஆரோக்கியமான உச்சந்தலையை பராமரிக்க வேண்டும். இந்த வேலையை செய்வதற்காக உச்சந்தலை ஸ்க்ரப் பயன்படுகிறது. 

உச்சந்தலையை அழுத்தி தேய்த்து ஸ்க்ரப் செய்வதால் அழுக்கு, தூசு மற்றும் ரசாயனக் கட்டமைப்புகள் உச்சந்தலையில் இருந்து வெளியேறி உச்சந்தலை புத்துணர்ச்சி அடைகிறது. உங்கள் உச்சந்தலையில் எண்ணெய் பிசுபிசுப்பு அதிகம் இருந்தால், உச்சந்தலையை ஸ்க்ரப் செய்வதால் அதிக எண்ணெய் உற்பத்தி குறைந்து , உச்சந்தலை புதுப்பிக்கப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது இந்த உச்சந்தலையை ஸ்க்ரப் செய்து கொள்வது நல்ல பலன்களைத் தரும். இதனால் உங்கள் கூந்தல் பளபளப்பாகவும் , வலிமையாகவும், நீளமாகவும் வளர்கிறது. ஆகவே உங்கள் கூந்தலை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் வழக்கமான கூந்தல் பராமரிப்பில் உச்சந்தலை ஸ்க்ரப்பிங் முறையையும் இணைத்துக் கொள்ளுங்கள்.

 உச்சந்தலை ஸ்க்ரப் செய்வதால் உண்டாகும் நன்மைகள் :

 . உச்சந்தலையில் மேற்படல பிரிப்பை மேற்கொண்டு இறந்த சரும அணுக்கள், அழுக்கு மற்றும் தூசு போன்றவற்றை வெளியேற்ற உதவுகிறது.
 . உச்சந்தலை உற்பத்தி செய்யும் அதிக எண்ணெய்யை அகற்றவும் உதவுகிறது.
 . தலைமுடியின் வேர்க்கல்களில் உள்ள அடைப்பைப் போக்க உதவுகிறது.
 . உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, கூந்தலின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது.
 . கூந்தல் உதிர்வதைத் தடுக்க உதவுகிறது.
 . கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
 . பொடுகு தொந்தரவிற்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.
 
உச்சந்தலையை வீட்டிலேயே ஸ்க்ரப் செய்வது எப்படி?
அழகு நிலையங்களில் இதனை தொழில் ரீதியில் செய்து வந்தாலும், உங்கள் வசதிக்கேற்ற முறையில் வீட்டிலேயே ஸ்க்ரப் செய்து கொள்வதால் இன்னும் அதிக பலன் கிடைக்கும். மேலும் இயற்கை மூலப்பொருள் கொண்டு இதனை செய்யும்போது கூந்தலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படாது.

1. ஓட்ஸ் மற்றும் பழுப்பு சர்க்கரை:
உச்சந்தலையின் மேற்படலத்தில் உள்ள அழுக்கை நீக்கி இறந்த அணுக்களை வெளியேற்ற பழுப்பு சர்க்கரை உதவுகிறது. உச்சந்தலையை சுத்தம் செய்ய ஓட்ஸ் உதவுகிறது. மேலும் ஓட்ஸ்ஸில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மை உச்சந்தலையில் உண்டாகும் அரிப்பைக் கட்டுப்படுத்தி இதமான உணர்வைத் தருகிறது .

தேவையான பொருட்கள்:
 . இரண்டு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை 
 . இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர்
 . ஒரு ஸ்பூன் கண்டிஷனர்
 . பத்து துளி பாதாம் எண்ணெய்

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் கண்டிஷனர் சேர்க்கவும்.
2. இதனுடன் ஓட்ஸ், பழுப்பு சர்க்கரை ஆகியவற்றைக் கலந்துக் கொள்ளவும்.
3. பிறகு இதனுடன் பாதாம் எண்ணெயைச் சேர்க்கவும்.
4. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளவும்.
5. இந்த கலவையைக் கொண்டு உச்சந்தலையில் 5 நிமிடங்கள் சுழல் வடிவத்தில் மசாஜ் செய்யவும்.
6. பின்பு வெதுவெதுப்பான நீரைக் கொண்டு தலை முடியை அலசவும்.
7. பிறகு தலை முடியை நன்றாக காய விடவும்.

2. கடல் உப்பு , ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு
உச்சந்தலையில் உள்ள கழிவுகளை அகற்றி உச்சந்தலைக்கு இதமளிக்க உதவுவது கடல் உப்பாகும். ஆலிவ் எண்ணெய் உச்சந்தலையின் ஆழத்தில் ஊடுருவி ஈரப்பதத்தைத் தந்து கூந்தலின் வேர்க்கால்களுக்கு புத்துணர்ச்சி அளித்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி சத்து இருக்கிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள அன்டி ஆக்சிடென்ட் தன்மை காரணமாக, உச்சந்தலை தீங்கு விளைவிக்கும் கூறுகளில் இருந்து பாதுகாக்கப்படுகிறது . இதனால் பொடுகு மற்றும் கூந்தல் உதிர்வு போன்றவை தடுக்கப்படுகின்றன.

தேவையான பொருட்கள்:
 . இரண்டு ஸ்பூன் கடல் உப்பு
 . ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
 . அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு
 . ஒரு ஸ்பூன் கண்டிஷனர்

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் கடல் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்க்கவும்.
2. இரண்டையும் ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்தக் கலவையுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
4. இந்தக் கலவையுடன் கண்டிஷனர் சேர்த்து, எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
5. உங்கள் உச்சந்தலையை ஈரமாக்கிக் கொள்ளவும்.
6. உங்கள் உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவி சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும்.
7. ஒரு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
 
3. பாதாம், தேங்காய் எண்ணெய் மற்றும் டீ ட்ரீ எண்ணெய்:
கூந்தலின் வேர்கால்களுக்கு புத்துணர்ச்சி தரும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் பாதாமில் உள்ளன. கூந்தலுக்குள் ஆழமாக ஊடுருவி, சேதங்களைத் தடுக்க உதவுகிறது தேங்காய் எண்ணெய். டீ ட்ரீ எண்ணெய்யின் கிருமி எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அரிப்பைப் போக்கி, எரிச்சலைத் தடுத்து, ஆரோக்கியமான உச்சந்தலை உருவாக்கத்தை செயல்படுத்த உதவுகிறது.

தேவையான பொருட்கள்:
 . இரண்டு ஸ்பூன் அரைத்த பாதாம் விழுது 
 . ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
 . ஒரு ஸ்பூன் டீ ட்ரீ எண்ணெய்

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் எல்லா மூலப்பொருட்களையும் ஒன்றாகக் கலந்துக் கொள்ளுங்கள்.
2. தலைக்கு வழக்கம் போல் ஷாம்பூ தேய்த்து குளித்து அதிக நீரை பிழிந்துக் கொள்ளுங்கள்.
3. பிறகு இந்த கலவையை தலையில் தடவி, மென்மையாக ஐந்து நிமிடம் சுழல் வடிவத்தில் மசாஜ் செய்து கொள்ளுங்கள்
4. பிறகு தலையை அலசுங்கள்.
5. தலையைத் துடைத்து காய வைத்துக் கொள்ளுங்கள்.

4. சோள மாவு  மற்றும் டீ ட்ரீ எண்ணெய்:
டீ ட்ரீ எண்ணெயுடன் சேர்த்து கலக்கப்பட்ட சோளமாவு உச்சந்தலையை சுத்தம் செய்து சேதங்களைத் தடுக்க உதவுகிறது. இதனால் கூந்தலின் புத்துணர்ச்சி அதிகரிக்கிறது.

தேவையான பொருட்கள்:
 . ஒரு ஸ்பூன் சோளமாவு
 . அரை ஸ்பூன் டீ ட்ரீ எண்ணெய் 

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் சோளமாவு ஒரு ஸ்பூன் போடவும்.
2. அதில், டீ ட்ரீ எண்ணெய் சேர்த்து இரண்டையும் நன்றாகக் கலக்கவும்.
3. இந்த கலவை கொண்டு உச்சந்தலையில் சுழல் வடிவத்தில் ஐந்து நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும். 
4. பிறகு வழக்கமான முறையில் ஷாம்பூ தேய்த்து தலையை அலசவும்.

5. முட்டையின் மஞ்சள் கரு, தயிர் மற்றும் விளக்கெண்ணெய்:
முட்டையின் மஞ்சள் கரு கூந்தலின் வேர்கால்களில் புத்துணர்ச்சி தந்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உச்சந்தலையை புத்துணர்ச்சி பெறச் செய்யும் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளன. மேலும் பொடுகைப் போக்கவும்  தயிர் உதவுகிறது, விளக்கெண்ணெய் , இரத்த ஓட்டத்தை அதிகரித்து , உச்சந்தலையில் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

தேவையான பொருட்கள்:
 . இரண்டு முட்டை மஞ்சள் கரு
 . ஒரு கிண்ணத்தில் தயிர்
 . ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய்
 . ஒரு ஸ்பூன் உப்பு

செய்முறை:
1. மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் சேர்க்கவும்.
2. எல்லாவற்றியும் ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவி சுழல் வடிவத்தில் 5 முதல்  10 நிமிடங்கள் மென்மையாக மசாஜ் செய்யவும்.
4. பிறகு ஒரு ஷவர் கேப் அணிந்து தலையை மூடிக் கொள்ளவும்.
5. 15 நிமிடங்கள் அப்படியே விடவும்.
6. பிறகு ஒரு மிதமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.

6. தேன், பெப்பெர்மின்ட் எண்ணெய் மற்றும் பழுப்பு சர்க்கரை:
உச்சந்தலையில் உள்ள ஈரப்பதத்தை உள்ளுக்குள்ளேயே பூட்டி வைக்கும் திறன் தேனுக்கு உண்டு. மேலும் உச்சந்தலையின் pH அளவைப் பராமரிக்க தேன் உதவுகிறது. இதனால் உச்சந்தலை சீரான முறையில் கண்டிஷன் செய்யப்படுகிறது. இதனால் சேதங்கள் தடுக்கப்படுகின்றன. பெப்பெர்மின்ட் எண்ணெய் கூந்தலின் வேர்க்கால்களை புத்துணர்ச்சி பெறச் செய்து, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுகிறது.

தேவையான பொருட்கள்:
 . ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன்
 . ஒரு ஸ்பூன் பெப்பெர்மின்ட் எண்ணெய்
 . ஒரு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை

செய்முறை:
1. மேலே கூறிய எல்லா மூலப்பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போடவும்.
2. எல்லாவற்றையும் ஒன்றாகக் கலக்கவும்.
3. இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் தடவவும்.
4. பிறகு மென்மையான முறையில் சுழல் வடிவத்தில் ஐந்து நிமிடம் மசாஜ் செய்யவும்.
5. பிறகு மென்மையான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.

7. பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெய் :
உச்சந்தலையை சிறப்பாக சுத்தம் செய்யவும் ஆரோக்கியமான முறையில் பராமரிக்கவும் ஒரு சக்தி வாய்ந்த தீர்வாக இருப்பது பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெயின் ஒருங்கிணைப்பு.

தேவையான பொருட்கள்:
 . ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா
 . டீ ட்ரீ எண்ணெய் சில துளிகள்
 . ஒரு ஸ்பூன் ஷாம்பூ

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் ஷாம்பூ சேர்க்கவும்.
2. அதில் மேலே கூறிய அளவு பேக்கிங் சோடா மற்றும் டீ ட்ரீ எண்ணெய் சேர்த்து ஒன்றாகக் கலக்கவும்.
3. பிறகு இந்த கலவையை உங்கள் உச்சந்தலையில் சுழல் வடிவத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்யவும்.
4. பிறகு வெதுவெதுப்பான நீரால் தலையை அலசவும்.

8. அஸ்பிரின் ஸ்க்ரப்:
அஸ்பிரின் மாத்திரையில் சலிசிலிக் அமிலம் உள்ளது. இது முடி உதிர்வைத் தடுத்து, வேர்கால்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.

தேவையான பொருட்கள்:

 . 6-8 அஸ்பிரின் மாத்திரைகள்
 . 4 ஸ்பூன் வெதுவெதுப்பான நீர் 

செய்முறை:
1. ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றிக் கொள்ளவும்.
2. அந்த நீரில், அஸ்பிரின் மாத்திரைகளைக் கலந்து அது கரையும் வரை நன்றாகக் கலக்கவும்.
3. ஒரு பிரஷ் கொண்டு உங்கள் உச்சந்தலையில் இந்த கலவையைத் தடவவும்.
4. பிறகு 5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்யவும்.
5. பிறகு வழக்கமான ஷாம்பூ கொண்டு தலையை அலசவும்.
6. தலையை அலசியபின் நன்றாகக் காய விடவும்.