சர்க்கரை வள்ளி கிழங்கின் பெருமை

சர்க்கரை வள்ளி கிழங்கு நாம் அனைவரும் அறிந்த ஒரு கிழங்கு வகை ஆகும். இளம்  சிவப்பு நிறம்  அல்லது ஊதா நிறம்  மற்றும் வெளிர் நிறத்தில்  இருக்கும் இந்த கிழங்கு இனிப்பு சுவை உடையதாய்  இருக்கும்.

சர்க்கரை வள்ளி கிழங்கின் பெருமை

பொங்கல் திருநாளில் நம்முடைய வீடுகளில் பொங்கல், கரும்புடன் சேர்த்து காய்கறிகளையும் சூரிய பகவானுக்கு படைப்பது நமது வழக்கம். அப்படி படைக்கப்படும் காய்கறிகளுள்  சர்க்கரை வள்ளி கிழங்கும் ஒன்று. 

மற்ற கிழங்கு வகைகளை காட்டிலும் இதன் ஊட்டச்சத்துகள் மிகவும் அதிகம். இதன் இளம் இலைகளும் உட்கொள்ள கூடியவை. வைட்டமின் ஏ அதிகபட்சமாக சக்கரை வள்ளி கிழங்கில் தான் உள்ளது. சர்க்கரை வள்ளி கிழக்கை உண்பதால் உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்கள் ஆகிவற்றின் தாக்கத்தை குறைக்கிறது .

ஊட்டச்சத்து அட்டவணை :
சர்க்கரை வள்ளி கிழங்கின் ஊட்டச்சத்து விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

100கிராம் சர்க்கரை வள்ளி கிழங்கில் 86 கலோரிகள் உள்ளன.
* புரதசத்து - 1.6 கிராம் 
* கார்போஹைரேட் - 20 கிராம் 
* சோடியம்  - 55மில்லி கிராம்
* பொட்டாசியம் - 337 மில்லி கிராம் 
* கொலெஸ்ட்ரோல் - முற்றிலும் இல்லை  

சர்க்கரை வள்ளி கிழங்கின் நன்மைகள்:

* 1. வைட்டமின் சி அதிகமாக உள்ளது:
வைட்டமின் சி நோயெதிர்ப்பு சக்திக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து ஆகும். காய்ச்சல், சளி மற்றும் இருமலை எதிர்த்து போராடுகிறது. சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் இவை எலும்பு வடிவமைப்பிற்கும் ரத்த அணுக்கள் உற்பத்திக்கும் அதிகம் துணை புரிகின்றன.

* 2. இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது:
சோடியம் குறைத்த பொட்டாசியம் அதிகரித்த உணவுகளை உண்பதன் மூலம் சீரான இரத்த அழுத்தம் பேணப்படுகிறது. மேலே குறிப்பிட்ட ஊட்டச்சத்து அட்டவணையில் 100 கிராம் சர்க்கரை வள்ளி கிழங்கில் 337மி. கி பொட்டாசியம் இருப்பதாகவும்   55மி.கி சோடியம் இருப்பதாகவும்  தெரிவிப்பதால் இதை உட்கொள்வதில் மூலம் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது.

* 3. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது:
சர்க்கரை வள்ளி கிழங்கில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இந்த இரும்பு சத்து  சிவப்பு இரத்த அணுக்கள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள்  உற்பத்தியை  அதிகரித்து சிறந்த நோயெதிர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது. தீங்கு விளைவிக்கும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களிடம் இருந்து நம் உடலை  காக்கிறது.

* 4. மலச்சிக்கலை தடுக்கிறது:
சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. 100 கிராம் கிழங்கில் 12% நார்ச்சத்து உள்ளது. இது செரிமான மண்டலத்தை வலுப்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. சர்க்கரை வள்ளி கிழங்கில்  உள்ள இயற்கை மலமிளக்கிகள் மலச்சிக்கலில் இருந்து  நிவாரணம் தருகின்றன.

* 5. உடலில் சர்க்கரை அளவை குறைக்கிறது:
சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் அது உடலின் சர்க்கரை ஏக்கத்தை குறைக்கிறது. நார்ச்சத்து அதிகமாக உட்கொள்ளும் போது குளுக்கோஸின் அளவு குறைந்து காணப்படும். ஆகவே உங்கள் தினசரி உணவில் சர்க்கரை வள்ளி கிழங்கை சாலட்டிலோ, வறுவலிலோ,சூப்களிலோ அல்லது வேக வைத்தோ உண்பதன் மூலம் நார்ச்சத்தை அதிகப்படுத்தி சர்க்கரை அளவை குறைக்கலாம்.

* 6. சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் :
ஊதா நிற சர்க்கரை வள்ளி கிழங்கில்  ஆந்தோசியானின் என்ற நிறமி அதிக அளவில் உள்ளன இந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் செரிமானப் பிரச்சினையைத் தடுக்க உதவுகின்றன. இது கன உலோகங்கள் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளால்   உண்டாகும்   சுகாதார அபாயத்தை குறைக்கிறது.  இவை லிக்னன்ஸ், புரோட்டீன், டைட்டரி ஃபைபர் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றையும் அதிகமாக கொண்டிருக்கின்றன.

* 7. கர்ப்பகாலத்தில் நல்லது:
வைட்டமின் ஏ மற்றும் சி அதிகமாக இருப்பதால் , கர்ப்ப காலத்திலும் ,குழந்தைக்கு தாய் பால் கொடுக்கும் போதும் சர்க்கரை வள்ளி கிழங்கை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. 1 கப் வேகவைத்த கிழங்கில் 39மிகி வைட்மன் சி இருப்பதாகவும், 1.38மி கி இரும்புசத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது . ஆனால் அதிகப்படியான சர்க்கரை வள்ளி கிழங்கின் உட்கொள்ளல் கருச்சிதைவு மற்றும் குழந்தையின் பிறப்பு குறைபாடும் ஏற்படலாம். 

எப்படி உட்கொள்ளலாம்?
* சர்க்கரை வள்ளி கிழங்கை தண்ணீரில் போட்டு உப்பு சேர்த்து வேக வைத்து,வெந்தவுடன் அதன் தோலை நீக்கிவிட்டு  உண்ணலாம்.
* இதனை வறுத்தும் பொரித்தும்  உண்ணலாம்.
* சூப், கேக், மற்றும் கறிகள் செய்தும் உண்ணலாம்.

சர்க்கரை வள்ளி கிழங்கை வீட்டிலேயே பயிர் செய்யலாம்:
சர்க்கரை வள்ளி கிழங்கை பயிர் செய்வது மிகவும் சுலபம். வீட்டிலேயே எப்படி இதனை செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.
சாதாரண தொட்டிகளில் நாம் இதனை வளர்க்கலாம். இதற்கு  நமக்கு தேவையானது நல்ல முத்திய  கிழங்கு மட்டுமே. கடையில் நாம் நன்கு முத்திய  கிழங்கு 2 அல்லது 3  வாங்கி வந்து  ஒரு காகிதத்தில் நன்றாக சுற்றி ஒரு  இருட்டான பகுதியில் 1 வாரம் வரை வைக்க வேண்டும் . 1 வாரத்திற்கு பிறகு அதை எடுத்து பார்க்கும் போது அதில் சில முளைகள் தென்படும். அப்போது அதனை ஒரு தொட்டியில் வைத்து மண் போட்டு மூடி தண்ணீர் விட வேண்டும். 2 கிழங்கை ஒரு தொட்டியில் வைக்கலாம். தினமும் தண்ணீர் விட வேண்டும். 3-4 மாதங்களில் உங்கள் கிழங்கு அறுவடைக்கு தயாராக இருக்கும்!